தங்கைக்கோர் …. திருவாசகம் !

Vinkmag ad

( ’பொற்கிழி’ கவிஞர். மு.ஹிதாயத்துல்லா  , இளையான்குடி )

அலைபேசி : 99763 72229

 

 

தங்கையே …!

சாலிஹான நங்கையே …!

 

என் உயிரிகள் நிழலே …!

 

நான் பேசும் தமிழை

தேன் கலந்து பேச வந்த,

தென்றலே !

 

ஒன்று சொல்லட்டுமா…?

 

கல்வியென்பது

நம் முகத்திற்குக்

கண்களைப் போன்றது !

நமக்கு,

முகவரியும் அதுதானே …!

 

கல்வியென்பது

நம்மை உயர்த்துவது !

குறிப்பாக …

பெண்ணை நிமிர்த்துவதென்பேன் !

 

கல்வியென்பது

இந்த உலகத்தைப் பார்க்க வைக்கும்

கண்ணாடி !

 

கல்வியென்பது

அறியாமையை அப்புறப்படுத்துவது !

 

கல்வியென்பது

செல்வம் !

இது எடுத்தாலும் – பிறருக்கு

கொடுத்தாலும் குறைவதில்லை !

 

தங்கையே …!

நீயும் அறிந்திருப்பாயே …!

கல்வி

நபிமார்களின் பொருளென்று …!

 

இன்னொன்றும்

தெரியுமா…?

 

கல்வியொன்று தான்

களவாட முடியாத செல்வம் !

 

கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம்

சிறப்புயென்று

உன் ஆசிரியை சொன்னதாக

அன்று …

என்னிடம் சொன்னாயே …!

 

இந்த பூமியில்

மண் படிக்க

மரம் படிக்க

பெண் படிக்காதிருப்பது

பேதமையன்றோ…?

 

ஆம் !

 

தன்னுள் புதைத்த

விதைகளை

பூக்களாய், காய்களாய்

கனிகளாய் புன்னைகைக்க

மண் கற்றிருக்கும் போது,

பெண் படித்தாலென்ன…

பிழையா…?

 

சகோதரி !

 

உலகில் பேராபத்து

எது தெரியுமா…?

கல்லாமைதான் !

 

ஆமாம்… !

 

உன் பெயரை

வெறும் வாக்காளர் பட்டியலில் மட்டும்

பார்த்து விட விரும்புகிறாயா …?

அல்லது

இந்தப் புவனமே தன்

புருவத்தை உயர்த்திப் பார்க்கும்

வரலாற்றின் பட்டியலில்

பார்க்க விரும்புகிறாயா…?

 

வரலாற்றில் நீ

வாழ விரும்பினால்…

படி ! படி ! படி !

 

நீ படித்தால் … உன்னையிந்த

உலகம் படிக்கும் !

 

அன்று …

ஹீராவில்…

வானவர்கோன் ஜிப்ரீல் (அலை) அவர்கள்

 

சங்கைக்குரிய

நமதருமை நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு

முஹம்மதாய் இருந்தவர்க்கு,

 

நம் தங்கத் திருமறையின்

முதல் வாசகமாக

வசனமாக …!

இக்ர ஊரப்பிக்க யென்று

வாயசைத்துக்

கற்பித்த பொழுது … அதனைத்

திசைகளெல்லாம்…

திருப்பிச் சொன்னதாமே … !

அந்த வரிகளின் உயிரே

கல்வியின் அவசியம் பற்றித்தானே !

 

அன்று பத்ருப் போர்

கைதிகளில்

கற்றவர்கள், கல்லாதவர்களுக்கு

கல்வி போதித்து விட்டு

விடுதலையாகலாம் என்று

நமதருமை நாயகம் (ஸல்) அவர்கள்

அறிவுறுத்தினார்களே… !

 

இது உலகில்

எந்தத் தலைவர்களுக்கும்

எட்டாத சிந்தனை !

கல்விக்கு உயர்வளித்த

கல்வெட்டு வரிகளிவை !

 

கல்வியென்பது

இருட்டை எதிர்க்கும்

இராணுவம் !

இதையெந்தப் பூட்டுகளாகும்…

பூட்டி விட முடியாது !

 

ஒரு குடும்பத்தில்

பெண் படிக்கிற பொழுது,

பெருமை சேர்கிறது !

பேதமை மறைகிறது !

இன்னும் சொல்லப் போனால்…

வறுமையும் சற்று

ஒதுங்கத்தான் …செய்கிறது !

 

ஒரு காலத்தில் பெண்களுக்கு

கல்வி மறுக்கப்பட்ட பொழுது,

அன்றைய சமுதாயம்

இருட்டில் அல்லவா… கிடந்தது !

 

சகோதரி.. !

ஒரு சமுதாய விடியலுக்கான

வெளிச்சம் – வேறெங்குமில்லை !

உன்னுள் தான் இருக்கிறது !

பெண் கல்வி

கற்பதினால் தான் … இருக்கிறது !

 

நம் சங்கையான

இஸ்லாம் மார்க்கம்

போதிப்பது போல

கற்பவராக இரு !

அல்லது கற்பிப்பபவராக இரு !

 

நமது வள்ளுவப் பெருந்தகையும்

எல்லோரையும்…

கற்கத்தானே சொன்னார் !

 

தங்கையே ..!

ஒரு பெண்ணின் உயர்வு

சாலிஹான ஒழுக்கத்திலும்

சங்கையான கல்வியிலும் தான்

என்பதை மட்டும்

மறந்து விடாதே … !

 

இதுவே, உன்

அண்ணன் உனக்குக் கற்பிக்கும்

திருவாசகம் !

 

News

Read Previous

அம்மாமாரே ! ஐயாமாரே !

Read Next

தமிழில் அறிவியல் படித்தால் ..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *