செம்மொழியான தமிழ் மொழியாம் !
– கவிஞர் அத்தாவுல்லா –
மொழிகளில்
நீ மூத்த மொழி
கல்தோன்றி மண்தோன்றும் முன்னமே
பூத்த மொழி !
நீ – ஒரு வகையில்
வானம் போல் !
பார்க்கவும் படிக்கவும்
முடிகிறது
தூரம் மட்டும்
இன்னும் தென்படவேயில்லை !
நீ – ஒரு வகையில்
பூமி போல் !
தோண்டத் தோண்ட
எங்கும் சுவை நீராய் !
நீ – எங்கள் மூலதனம்
சேதாரப்படாத
செல்வக்களஞ்சியங்கள்
உன்னில் அதிகம் !
எம்மொழியிலும் இல்லாமல்
தம்மொழிக்குள்ளேயே
மும்மொழி கண்ட
செம்மொழி நீ !
முக்கடலும் முத்தமிடும்
தென் குமரியைப் போல்
இயல் –
இசை –
நாடகம் எனும்
முத்து உறையும்
முத்துறையும் உனக்குள் !
நீ …
உயிராய் …
மெய்யாய் …
உயிர்மெய்யாய்
உலகமெங்கும் கோலாச்சுகிறாய் !
முச்சங்கங்களில்
வளர்ந்த பயிர் நீ
கபாடபுரங்களில்
கலந்த கடல் நீ
எங்களின் உயிர் நீ !
இமயவரம்பில்
இசைக்கும் சிலம்பு நீ
எங்கள் இதயக்கூட்டில்
சுரக்கும் அமுது நீ !
நீ பாதி மனிதனின்
படையல் இல்லை
ஆதிமனிதன்
பேசிய அதிசயம் !
உன் மூத்த முகிழ்வே
காப்பிய இலக்கணத்தை
யாத்த நெகிழ்வாய்
எழுந்து நிற்கிறது !
ஒப்புக்குக்கூட வடிவமெனும்
துப்பில்லாத மொழிகளிடையே
தப்பில்லாத மொழி நீ
ஒப்பில்லாத மொழி நீ !
சுரந்த பிற மொழிகளின்
தாய் மடி நீ
தனித்து நிற்கும் தனித் தமிழ் நீ !
எல்லா மொழிகளிலும்
கட்டில் உண்டு
உனக்கு மட்டும்தான்
நாகரீகத் தொட்டில் உண்டு !
சுரைகளைச் சுமந்த ஏடுகளே
அநேக இடங்களில்
மொழிகளாகின்றன !
மொழிகள்
ஒருவகையில் வேட்கையைப் பேசுகின்றன
நீ மட்டும் தான்
வாழ்க்கையைப் பேசுகிறாய் !
எழுத்தும் சொல்லும்
எங்கும் அடங்கும்
‘பொருள்’ – நீ மட்டுமே
பெற்ற அருள் !
நீ மட்டும் தான்
வாழ்க்கை முறைகளையே
வடித்துக் காட்டுகிறாய் !
அதனால் தானே
களவியலில் கூட
கற்பியலைப் பேசுகிறாய்
பாலையிலும்
தென்றலாய் வீசுகிறாய் !
மொழிகளில் கூட
குலங்களைக் குறிக்கிறார்கள்
நீ மட்டும் தான்
நிலங்களைக் குறிக்கிறாய் !
முல்லை …
குறிஞ்சி …
மருதம் …
நெய்தல் …
பாலை என்று
ஐவகை நிலங்களைக் குறிக்கிறாய் !
வாழ்க்கை முறைகளை
நெறிப்படுத்துகிறாய் !
காலக்கணக்குகளைக் கூட
மேற்கணக்கு
கீழ்க்கணக்கு – என
கணித்திருக்கிறாய்
நீ மட்டும்
காலம் கணிக்க முடியாமல்
இனித்து நிற்கிறாய் !
எல்லா மொழிகளும்
‘புறம்’ பேசுகையில்
நீ மட்டும் தான்
‘அகம்’ பேசுகிறாய் !
அநேக விழுதுகள் உன்னில்
நீ மட்டும்
வீழாத ஆலவிருட்சமாய் !
இறைவன் தந்த
மதி மூலம்
நதி மூலம் கூடக்காணலாம்
உன் ஆதிமூலந்தான்
காண முடியாத
அற்புதமாய்
அதிசயித்து நிற்கிறது !
படிக்கப் படிக்கப்
பெருகும் உன் அற்புதம்
வடிக்க வடிக்க
மிஞ்சும் சொற்பதம் !
பரவாயில்லை
காலம் கொஞ்சம் கடந்தேனும்
உனக்கொரு
கவுரவம் கிடைத்திருக்கிறது
அதில்
எங்கள் மனம்
நிறைந்திருக்கிறது !