சவ வண்டியானது கங்கை
*சவ வண்டியானது கங்கை*
– பருல் கக்கர்
– ஆங்கிலம் வழி தமிழில்: ரவிக்குமார்
பிணங்களெல்லாம் ஒரே குரலில் கூவின
“ எல்லாம் சுபிட்சமா இருக்கு, எல்லாம் சுபிட்சமா இருக்கு “
அரசே! உங்கள் உன்னத சாம்ராஜ்யத்தில்
சவ வண்டியானது கங்கை
அரசே! உங்கள் மயானங்கள் போதவில்லை
சவங்களை எரிக்க விறகும் போதவில்லை
அரசே! பாடை தூக்குபவர்களும் போதவில்லை
ஒப்பாரி வைப்பவர்களும் போதவில்லை
அரசே! ஒவ்வொரு வீட்டுக்கும் செல்கிறான் எமன்,
ஆடுகிறான் சாவின் நடனத்தை
அரசே! உங்கள் உன்னத சாம்ராஜ்யத்தில்
சவ வண்டியானது கங்கை
அரசே! உங்கள் புகைபோக்கிகள் இப்போது ஓய்வு கோருகின்றன
அரசே! நொறுங்கிவிட்டன எங்கள் வளையல்கள்,
நொறுங்கிவிட்டன எங்கள் துடிதுடிக்கும் இதயங்கள்
நகரம் தீப்பற்றி எரியும்போது வாசிக்கப்படுகிறது ஃபிடில்
“ அட ..அட.. பில்லா, ரங்கா”
அரசே! உங்கள் உன்னத சாம்ராஜ்யத்தில்
சவ வண்டியானது கங்கை
அரசே! உங்கள் ஆடைகள் தெய்வீகமானவை,
தெய்வீகமானது உங்கள் பிரகாசம்.
அரசே! நாடு முழுவதும் பார்க்கிறது உங்களின் உண்மையான உருவத்தை
சரியான ஆண் யாராவது இங்கே இருந்தால் முன்னே வாருங்கள், சொல்லுங்கள்: “ மகாராஜா உடம்பில் துணியில்லை”
அரசே! உங்களது உன்னத சாம்ராஜ்யத்தில்
சவ வண்டியானது கங்கை
( குஜராத்தி கவிஞர் பருல் கக்கர் எழுதிய இக்கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள்: ரீட்டா, அபிஜித் கோத்தாரி.
தமிழாக்கம்: ரவிக்குமார்
நன்றி: The Wire )