கொஞ்சம் பொறு
கொஞ்சம் பொறு
==============================
ஓ!சூரியனே!
கொஞ்சம் பொறு.
உன்னில் முகம் கழுவிக்கொள்கிறேன்.
இரவின்
மரங்கொத்திப்பறவைகள்
செய்த காயங்களுக்கு
உன் டெட்டால் கொண்டு கழுவிக்கொள்கிறேன்.
அந்த
“உழைப்பாளர் சிலை அருகே நில்
வந்து விடுகிறேன்”
என்றாள்
அந்த பெரும்பாறையும்
கடப்பாரையும்
நரம்பு புடைத்த அந்த கரங்களும்
என்னை
நசுக்கிக்கொண்டே இருந்தது தான்
மிச்சம்.
கொஞ்ச நேரத்தில்
கொஞ்சி கொஞ்சி
கிணு கிணுவென்று
“செல்லு”வாள் “சாரிடா” என்று.
காதலுக்கு கண்ணுமில்லை. முகமும் இல்லை.
எந்த முகத்தை
உன்னிடம் கழுவிக்கொள்ள?
உன் ஆரஞ்சு லாவாவில்
அவள் ஆப்பிள் கன்னங்களை
வார்ப்பு செய்யவே இன்னும் ஆசை.
விடியல்
எனும் கோடி கோடி பக்கங்கள்
உள்ள நாவலை
ஒவ்வொரு பக்கமாய்த்தான் தினமும் எழுதுகிறாய்.
என் பக்கம் இன்னும் உன்னிடம்
விடியவில்லை.
இன்று மீண்டும் அந்த
இ.சி.ஆர் ரோடில்
கடல் அலை உமிழும்
நுரைகளோடு கொஞ்சிக்கொண்டிருக்கச்சொல்வாள்.
ஒரு நாள்
கிழக்கு என்பதே திசை மாறும்
அப்போது
இந்தக்காதலின்
மலைப்பாம்பு போன்ற நீண்ட குகையின்
மறுமுனை தெரியும்.
தெரிந்து என்ன செய்வது?
இந்த பஞ்சு மிட்டாய்க்கூழாகி
வாழ்க்கை எனும் அர்த்தத்தின்
விலா எலும்புகள் எல்லாம்
நொறுங்கிப்போய் இருக்கும்.
உன் தீயில் தெரியும்
அந்த சோப்புக்குமிழிகளை
பிடிக்கவே எனக்கு இன்னும் அந்த ஆசை.