கொஞ்சம் கண்ணுறங்க விடுங்கள்
கொஞ்சம் கண்ணுறங்க விடுங்கள்
கொஞ்சம் இளைப்பாற அனுமதியுங்கள்
ஓய்வெடுக்கிறது நீதி
ஊழல் புகார்
சொத்துக்குவிப்பு வழக்குகளின்
ஆண்டுக்கணக்கிலான விசாரணையின்
களைப்பு மேலிட்டுத் திணறுகிறது நீதி
கொஞ்சம் கண்ணுறங்க விடுங்கள்
வரி ஏய்ப்பு, தகிடுதத்தம்
நிதி மோசடி வழக்குகளின் பொருட்டு
இடைவிடாது ஒலித்த குரல்களின்
சலிப்பில் கெஞ்சுகிறது நீதி
கொஞ்சம் திருப்பள்ளி கொள்ளட்டும்
போதையில் வண்டியோட்டிப் போகிற
பாதையில் பொறுப்பின்றித் தூங்கிய
வில்லன்களை விட்டுவிட்டு
கதாநாயகர்களைத் தேவையின்றி
வருடக்கணக்கில் அலைக்கழித்த
அலுப்பில் கொட்டாவி விடுகிறது நீதி
கொஞ்சம் துயிலட்டும் விடுங்கள்
ஜனநாயகம், சமத்துவம், நேர்மை, கண்ணியம்
என்று எத்தனை பளுவைச் சுமக்க முடியும்
வளர்ச்சியை நோக்கி
ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தேசம் ?
விதிகள் மாற்றத்திற்குள்ளாகும் நவீனமயத்தில்
கிடந்து திண்டாடுகிறது நீதி –
கட்டாய ஓய்வுக்கு நிர்பந்திக்கப்படுமுன்
சேமிப்பிலிருக்கும் விடுப்பில் செல்ல
அனுமதியுங்கள் கொஞ்சம் !
தேடாதிருங்கள்,
காணவில்லையே என புலம்பாதிருங்கள்
ஓய்வெடுக்கிறது நீதி !
– எஸ் வி வேணுகோபாலன்
sv.venu@gmail.com
நன்றி: தீக்கதிர்: 13 05 2015