கால எல்லைகள்
கால எல்லைகள்
கால எல்லைகள் கண்ணுக்குத் தெரியாமல் காத்திருக்கின்றன..
ஞால எல்லைக்குள் புலப்படாமலே புன்னகை புரிகின்றன…
பாவம் மனிதனோ பரபரப்புக்குள் தினமும் ஆளாகிறான்!
யாவும் அறிந்த இறைவன்மட்டுமே என்றும் நமை ஆள்கிறான்!!
சேர்வதும் பிரிவதும் இயற்கையின் நியதிகள் இலக்கணப்படியென்றும்
சேர்வதில் மகிழ்வதும் பிரிவதில் துடிப்பதும் உயிர்களின்நிலையென்றும்
வாழ்வதை வகுத்தவன் வண்ணம்மாறாமல் இன்றும் சிரிக்கிறான்!
வந்துசேர்ந்தவன் போகின்றநாள்வரை இங்கு தவிக்கிறான்!!
பூக்களில்கூடவே நிறங்களைப் படைத்தவன் பூஜைகள் பெறுகின்றான்!
வேர்களின்மூச்சினை கிளைகள் மறந்தாலும் கருணையைப் பொழிகின்றான்!
தேர்வது தேர்ந்ததால் வெற்றியைமட்டுமே மனிதன் தொடுகின்றான்!
தேறாமல் வாழ்விலே தோல்விகள் கண்டவன் வாழ்க்கையை வெறுக்கிறான்!
கருணை கொண்டவன் கறந்தபாலென நல்மனதினைப் பெறுகிறான்!
இருண்ட பூமியாய் இதயம்கொண்டவன் பாரமாய் வாழ்கிறான்!
அன்பின் வழியிலே அகிலத்தைப் பாருங்கள்.. ஆனந்த உலகம் வரும்!
ஆண்டவன் படைப்பினில் எத்தனை அதிசயம் நிச்சயம் மனதைத்தொடும்!!
கால எல்லைகள் – காவிரிமைந்த ன்