கால்களற்ற தெரு
கால்களற்ற தெரு
எழுதியவர்: முனைவர் மு.அ. காதர், சிங்கப்பூர்
தெருவெல்லாம் பெருமூச்சு
திருப்பாதம் எங்கேப் போச்சு?
கால்களை காணவில்லை
சாலைகள் ஏழையாச்சு!
வீதியிலே நாதியில்லை
பீதி மட்டும் மீதியாச்சு!
கொடுமையோ கொடுமையம்மா
கொரோனா மட்டும் சேதியாச்சு!
வழி மீது விழி வைத்தால்
வலிக்கிறது தெருக்களுக்கு!
மொழித்தந்தத் தமிழ்த்தாயே
ஏற்றிவிடு திருவிளக்கு!
நடைபாதை தடைநீங்க
விடைக்கேட்டு காத்திருக்கு!
கடைவீதி திறக்காதா
கண்களெல்லாம் பூத்திருக்கு!
கால்களில்லை வீதியிலே
கையுடைந்தோம் பாதியிலே!
மனமுடைந்தோம் சேதியிலே
குணமடைவோமொரு தேதியிலே!
தெருவெல்லாம் விழாக்கோலம்
ஒருநாளில் நிலா காணும்!
மறுவாழ்வில் புதுப்பாலம்
உருவாகும் பொற்காலம்!
கால்களற்ற தெரு
கடந்து போகும் பொறு!
நடந்ததெல்லாம் விடு
நாளை சிகரம் தொடு!