கவிதையும் கற்பனையும்
கவிதையும் கற்பனையும்
கவிதை அனைத்தும் கற்பனைத் திறனே
கற்பனை யாவும் கவிதையாவதில்லை.
கவிதை படைத்தல் கலையொன்றாகும்.
கற்பனை எண்ணத்தின் நிலைஎன்றாகும்
கவிதைக்கேன்றொரு இலக்கணம் உண்டு
கற்பனைக் கெந்த இலக்கணமும் இல்லை
கவிதைக் கென்றொரு சுவையது உண்டு
கற்பனையனைத்தும் சுவையானதல்ல
கவிதைக்குத் தேவை மொழியறிவாகும்
கற்பனைக்கென்று மொழியேதுமில்லை
கவிதைக்கென்று வரைமுறை உண்டு
கற்பனைக் கெந்த வரைமுறையுமில்லை
கவிதை என்பது பிறர் படித்து ரசிக்க
கற்பனை என்பது தானே ரசிக்க
கவிதையில் விரசம் தவிர்த்திடல் வேண்டும்
கற்பனைக்கந்த கட்டுப்பாடில்லை
கவிதை என்பது எழுத்து வடிவம்
கற்பனைக்குப் பல வடிவங்களுண்டு.
கவிதை என்பது மொழியை வளர்க்கும்
கற்பனையால் பல வழிகள் பிறக்கும்
கவிதையால் மெய்ஞானம் வளரும்
கற்பனையால் விஞ்ஞானம் வளரும்.
கவிதை எழுத கற்பனை தேவை
கற்பனை செய்ய கவிதை தேவையில்லை .
புத்தாண்டு வாழ்த்துக்களுடன்
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்