கள்ளோடு கவியாக்கி உயரத்தில் ஏற்று மனமே!- கவியரசு கண்ணதாசன்
கோடிட்ட முந்தானை
கொஞ்சிக் குழைந்தாடக்
கோலமயில் போலவரு வாள்
கொடியோடும் இடையாட
இடையோடும் கனியாடக்
குழல்மூடி ஆடிவரு வாள்
காடிட்ட வெண்பூக்கள்
கடைவாயில் நின்றாடக்
கண்ஜாடை நடனமிடு வாள்
கட்டான திருமேனிப்
பட்டாளம் கொண்டென்னைக்
கைதாக்கிச் சிறையிலிடு வாள்
ஊடிட்டுக் கூடிட்டு
உடலோடு சுவையிட்டு
உறவாடும் வஞ்சி மயிலை
உள்ளத்தின் உள்ளூறும்
கள்ளோடு கவியாக்கி
உயரத்தில் ஏற்று மனமே!
வாராழி கலசங்கள்
தேரேறி வருகின்ற
வடிவங்கள் சொர்க்க மிலையோ
வைகாசிப் பிறைப் போலக்
கைவீசி நடமாடும்
மஞ்ஜைகள் தெய்வ மிலையோ
நீராழி அலைசாய
நிலையான தவ ஞானம்
நிகழ்கின்ற உலக மிலையோ
நிழல்தேயு மானாலும்
சுவைதேய மாட்டாது
நீள்கின்ற இரவு மிலையோ!
ஓராழி அளவாக
உலகத்தின் கதைசொல்லி
உறவாடும் கன்னி மயிலை
உள்ளத்தின் உள்ளூறும்
கள்ளோடு கவியாக்கி
உயரத்தில் ஏற்று மனமே!
கவியரசு கண்ணதாசன்