கரும்புத் தமிழ்
கரும்புத் தமிழ்
இரும்போடு உழைத்திட்ட தொழிலாளி நான்
தமிழ்க் கரும்போடு செயலாற்ற எழுத்தாளியாய்
அமிழ்தான தமிழ்தன்னின் பொறுப்பாளியாய்
தரமற்ற செயல்களுக்கு மறுப்பாளியாய்
அமர்கின்ற மலரெல்லாம் தமிழாகவே அமர்ந்திங்கு
மகரந்தம் தனை நாடியே வழிகண்டு வந்திணைந்த
தமிழ்த்தேனி நான் ,ஊன் உயிர் தழுவுதல்போல்
நான் தமிழ் தழுவினேன்,உற்றதொரு தமிழ்நாடி
தேன்தேடி சுந்தரத் தமிழ்சூடி மகிழ்கின்ற
தமிழ்த்தேனி நான். உமிழ்கின்ற உமிழ்நீரும்
தேனாகவே தமிழ்த்தேனாகவே அருஞ்சுவையான தமிழ்தந்து எனை ஏற்றியே தமிழ்ச் சிறகுகள்
தந்தென்னைப் பறக்கின்ற அணிலாக உரு மாற்றியே மகிழ்கின்ற கலைவாணி தமிழ்வாணி,
தாள் பணிந்தே தமிழ்த் தொண்டு நான் செய்ய மனம் கொண்டு அடிபோற்றி நல்அறம் பாட புலம்பெயர்ந்து மரபணிலாய் உளம் கனிந்த தமிழ்த்தேனியாய் எனை மாற்றி வகை செய்த அறிஞர்கள் மகிழ்கின்ற தமிழோடு இனிதாகவே இணைகின்ற தமிழ் வாழ்க தமிழ் வாழ்கவே
கவிஞர்களே கவிதை வேண்டுமா
சொற்களை விதைக்காதீர் எண்ணங்களை
விதையுங்கள் .விதைப்பது விதையாக இருக்கட்டும்
வளர்வது நல் மரமாக இருக்கட்டும்
மண் புதைத்த விதை துடித்தெழுந்து
கண்விழித்து தளராமல் மண் பிளந்து
தன்னைத் தானே பிளந்து இரட்டையாய்ப்
விரிந்து நடுவே துளிர்விட்டு மண் பிளந்து
மேல் நோக்கி வளர்ந்து இரட்டை இலையாய் தலைநீட்டும் மண் பிளந்து நீர் தேடி
உள்ளோடி வேர்விடும் மண் பிளந்து பக்கவாட்டில்
பரந்து படர்ந்து நடுவே தளிராய் மலர்ந்து தழைத்து துளிராய் வளர்ந்து செடியாய் விளைந்து மீண்டும்
விழுதுவிட்டு மண் துளைத்து மரமாய் வளரும்
அழுதுவிட்டு மறந்துபோகும் மானிடர்க்கிடையே
விழுதுவிட்டு வெற்றிக் கனி கொடுக்கும்
வீழ்வதற்கே மீண்டும் முளைத்து வரும் விதை
விதைத்தால் வளரும் அதையறியாமல் புதைத்தோரை பதைக்க வைக்கும் கவிதையாய் வரும் தமிழ்க் கவிதையாய் வரும் வெகுண்டெழுந்தே இந்த விதை தகுந்த காலத்தில் முளைத்தே வரும் சொத்தென்றும் சொந்தமென்றும் சத்தான முத்தென்றும் பவழமென்றும் பாராமல் தீஞ்சுவைச் சதை கொண்ட பழங்கள் தரும் கற்பக விருட்ஷமாய் சக்தி கொண்டே மீண்டும் வரும்
சூழ்ச்சியின் வெப்பத்தால் எரிந்து போனாலும்
மீண்டும் பீனிக்ஸ் பறவையாய் சிறகடிக்கும்
வெற்றி வெற்றி வெற்றி என்றே தமிழ்த்தேரிலே
ஜெயம் ஜெயம் சுற்றி சுற்றி வரும் கவிதையாய் வரும்
—————————————————————————————————————
தமிழ்த்தேரோடும் தங்கத் தமிழ்த்தேரோடும் தமிழ் வேரோடி தழைத்திடும் பெரு மரமாய் தமிழ்த்தேரோடும் அமிழ்தினுமினிய தமிழ்த் தேரோடும் வீதிகளில் கோலமிடும் பெண்டிர் போல் குமிழ் சிரிப்பும் கொவ்வைச்
செவ்வாயும் குணநலன்களாகும் குழந்தை போன்ற குடகு மலையிலே பிறந்து குணக்குன்றேறி நின்று வாலைக் குமரியாய் கன்னியாய் தமிழ்த்தாயாய் வளர்ந்து தரணியெங்கும்வாழும் தமிழரிணைக்கும் பாலமாய்
தமிழ்த்தேரோடும்.கவிதையும் கற்பனையும் பொங்கிப் பெருவெள்ளமாய் சுழித்தோடும் காவிரிபோல் தமிழ்த்தேரோடும் காவிரி மைந்தர்களை கணிணியிலே இணைத்து உலகெங்கும் தங்கத் தேராய் மின்னி
தமிழ்த்தேரோடும்உலகத் தமிழர்களை இணைக்கும் பாலமாய் தமிழரெல்லாம் ஒரு சேரக் கைகோர்த்து
வடம் பிடித்திழுத்து வலம் வரச் செய்யும் தங்கத் தமிழே தேராய் ஓடும் சிங்கத் தமிழன் சீறிவருவது போலே தங்கத்
தமிழும் தரணியெங்கும் தேராய் ஓடும், தமிழே ஆறாய் ஒடும் கவிதை காவிரியாய்ப் பாயும், வெள்ளமாய்க் கரைபுரண்டோடும் ஆங்காங்கே சுழித்து களிப்பாய் நடனமாடிப் பொங்கிப் ப்ரவகித்து மலைப்பிஞ்சுகளை
சுருட்டி இழுத்து சிறு கற்களாய் உருட்டி மரங்களைச் சுண்டி இழுத்து நீரோட்டத்தின் வேகத்தில் சிறு மிதவையாய் மாற்றி வாழும் உயிர்க்கெல்லாம் பல மூலிகைகளைத் தாங்கி வரும் நீராய் வயல் வெளியில்
பயிர்க்கு சக்தியாய் வேருக்கு உயிரூட்டும் நீராய் கதிரவனின் கதிர்பட்டு வர்ணஜாலம் செய்யும் நீர்த் திவலையாய் கண்ணுக்கு விருந்தாய் இயற்கை எழிலைக் காட்டி அதன் ஓசையைக் கூட்டி காதுக்கும்
விருந்தாய் கலையை ரசிப்போர்க்கு , படைத்த இறையின் பெருமையை உணர்த்தி நல் மருந்தாய் அறிவூட்டும்
ரகசியமாய் கவிதையாய் மாறும் தங்கத் தேராய் ஓடும் தமிழ்த்தேராய் தலை நிமிர்ந்து தரணியெங்கும் ஓடும்
அன்புடன்
தமிழ்த்தேனீ