கண்ணிய கஃ பாவே …! போய் வரட்டுமா ?
கண்ணிய கஃ பாவே …!
போய் வரட்டுமா 😕
கவிஞர் மு ஹிதாயத்துல்லா
இளையான்குடி
( கடந்த 2011 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட கவிஞர் இவ்வாண்டு புனித ஹஜ் செய்யும் வாய்ப்பினைப் பெற்றார்.
புனித ஹஜ்ஜை முடித்து விட்டு புனித மக்காவினை விட்டுப் பிரியும் நேரத்தில் எழுதிய கவிதை )
பிரிய மனமில்லாமல் நான்
உன்னைவிட்டு
உன் மண்ணைவிட்டுப் பிரிகிறேன்.
போய் வரட்டுமா..?
கண்ணோரம் நீர்கசிந்து – என்
கன்னத்தை நனைக்கிறது
எதைச்சொல்வது
எப்படிச் சொல்வதென
மொழிகள் – முட்டிக் கொள்கிறது !
உற்சாகமாய் ………….
தல்பியா சொன்ன நாவு கூட
சோகம் உடுத்தியிருப்பதை …..
உணர்கிறேன் !
வாழ்வில் வசந்தம் என்கிறார்களே
அது
உன்னைப் பார்த்த பிறகுதான்
நிஜமெனத் தெரிந்தது !
கண் வழி புகுந்து
கல்பினில் நிறைந்த ….
க அபாவே !
அப்படி யென்ன
உன்னிடம் இருக்கிறது ?
கோடிக்கண்கள் பார்த்தும்
குறையாத அழகாயிருக்கிறாய் !
சங்கைக்குரிய எங்கள்
கோமான் நபி ஸல் அவர்கள் பார்த்த
குன்றாத பேரழகாய் ….
காட்சிதருகிறாய் …!
உன்னோடு இருந்த நாட்களை
இபாதத்தில் கரையவைத்தாய் !
எங்கள் ஈமானையும் கொஞ்சம்
புதுப்பித்து தந்தாய் !
உன்னைச் சுற்றி ….
மலைகள் !
மலையின் மடியில் .. இருக்கிறாயோயென
எண்ணத் தோன்றுகிறது !
அந்தக்
காலைச் சூரியன்
பனி நீரால்
தன் ஒளிக்கிரகணத்தை
உளுச் செய்து
விட்டு வந்தே
உன்னைப் பார்த்துப் போகிறது
குளத்தில்தானே … தாமரை !
ஆனால் … நீ
வெப்ப நிலத்தில் பூத்த …
தாமரையா …?
மனித சமுத்திரத்தையே
தவாபாய் … சுற்ற வைத்திருக்கிறாயே !
இந்த விந்தை
எந்த மண்ணிலும் கிடையாது
ஒருவனே இறைவனென்று
உரத்துச் சொல்லத்தானோ
உட்காராமல்
நின்று கொண்டிருக்கிறாய் ..!
கறுப்புத்திரையணிந்த
க அபாவே …!
ஒருவரையொருவர்
நேசிக்கலாம்
ஆனால் …
உலக முஸ்லீம்கள் அனைவரும்
உன்னை நேசிக்கிறார்களே …!
இது … காதலா…? இல்லை
அதையும் கடந்ததா..?
எனக்குச் சொல்லத் தெரியவில்லை !
தரைவழி வந்தால்
எங்கே … புழுதிபடியுமென்று
உன்னைக் காண
வான்வழி பறந்து வந்தேன் !
உன்னை மீண்டும்
காணத்தான் … ஆசை !
வல்ல அல்லாஹ்வின் நாட்டம்
எப்படியோ …?
இருந்தாலும்
உன்னைத் தினமும்
கனவிலாவது பார்த்துக்கொள்ள
உன்னை யென்
கண்களால் சுமந்து போகிறேன்
உன் மண்ணில் வாழ்ந்த நாட்களை
என் ஞாபக டைரியில்
வைரவரிகளால்
எழுதி வைத்திருக்கிறேன்
போய் வரட்டுமா ?
அல்லாஹு அக்பர்