கண்ணன் என் தெய்வம்!
(கவியரசர் கவிதை)
ஆடுவான் கோகுலத்தில்
ஆயர் மனைகளிலே
கூடுவான் கோபியரைக்
கொஞ்சுமினம் வஞ்சியரை
பாடுவான் ஓடுவான்
பார்ப்பதற்கு விளையாட்டு
தேடுவோர் கண்களுக்கோர்
திசையறிந்த தெய்வமகன்
அந்தியிலும் சந்தியிலும்
அர்த்தசா மத்தினிலும்
சிந்தையினில் கண்ணனைநான்
சேவித்தே வாழுகின்றேன்
தந்தை தாய் மக்கள்
என்குலத்தின் உறவினர்கள்
முந்தைப் பிறவிகளில்
முன்றிருந்த பெரியோர்கள்
அத்தனையும் கண்ணனவன்
அவதாரம் என்றிருந்தேன்
தாயாக வந்தக்கால்
தலைமாட்டில் நிற்கின்றான்
நோயாக வந்தக்கால்
நோய்மருத்துவம் ஆகின்றான்
பாரதத்தில் அன்று
பார்த்தனுக்கு சொன்னதெல்லாம்
ஓரளவு எந்தன்
உள்ளத்தும் சொல்கின்றான்
கையெடுத்து நானோர்
கணக்கை உணர்ந்துவிட்டால்
கைகொடுத்தே என்னைக்
கரையேற்ற முந்துகின்றான்!
(கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் நூலின் 7ஆம் பாகத்திலிருந்து)