ஓ மழைப்பெண்ணே..
ஓ மழைப்பெண்ணே.. அடி மழைப்பெண்ணே.. (கவிதை) வித்யாசாகர்!
சங்கு நத்தைப் பல்லழகு சிந்துந்தேன் பேச்சழகு
மஞ்சவெயில் முகமழகு மழைவான மௌனமழகு.,
கன்னக்குழியழகு கருப்புமுடியின் வகிடழகு
காதல் பொய்யுமழகு மழைப்பெண்ணே நீ முழு அழகு!
சந்தனப் பூப் போல சங்கழகுக் கொண்டவளே
செவ்விதழ் தீயள்ளி உச்சந்தலைச் சுட்டவளே
சுடரேந்திச் சித்திரமாய் முகமெல்லாம் இனிக்குதடி
நீ வந்து நின்றால்தான் நிசப் பொழுது மலருதடி!
தனிமையில் கொல்கிறாய் கவிதையுள் நெய்கிறாய்
கனவினுள் வருகிறாய் கனவாகவே முடிகிறாய்.,
உறக்கமும் தொலையுதே உனையெண்ணி உருகுதே
உயிர்வரைப் பூக்குதே உனைமட்டும் எண்ணுதே!
எனக்கென சொற்களில்லை எல்லாமே நீயானாய்
மௌனத்தை சேகரித்தேன் முப்பொழுதின் மொழியானாய்
முழுகாதவ வயிறாட்டம் மனதிற்குள் நிறைந்தவளே
முழுமூச்சை அசைப்போட்டு நெடுவானில் நின்னவளே!
தீக்குச்சியாய் உரசினாய் தீச் சுடாமலே ஒளிர்கிறாய்
செந்தழல் பரப்பி செவ்வானில் சிவக்கிறாய்
சூரியக் கீற்றோ நீ? சிறுவிழி யசைவில் நகைக்கிறாய்
மின்னலிடுங் கண்ணாலே மைப்பூசி மிளிர்கிறாய்;
மொத்தத்தில், மொத்தத்தில் நீ உயிரள்ளிக் குடிக்கிறாய்
மறுசென்ம வரங் கேட்டு வரங்கேட்டு இனிக்கிறாய்
நஞ்சள்ளிக் குடிப்பதுபோலுன் பிரிவைத்தான் சுமக்கிறேன்
நீ சிரிக்காத பார்க்காத இடந்தன்னில் இறக்கிறேன்!!
வித்யாசாகர்