ஒரு சாண் வயிறு
ஒரு சாண் வயிறு
===============
ஒரு சாண் வயிறுக்கு
மனிதன் தினம் தினம்
தேடலில் இறங்குகிறான்
பல வழியைத் தேடி ஓடுகிறான்.
ஆகாரம் கிடைக்காதவன்
விதி என்று புலம்புகிறான்
அடுத்த வேளை சாப்பாட்டுக்கு
உழைக்க மார்பை உயர்த்தி
சூளுரைக்கிறான்.
ஒரு சாண் வயிறு
இல்லை என்றால்
படைத்தவனாலேயே
மனிதனை அடக்க
முடியாமல் போகும்
பசி என்பதை தீர்க்கவே
உசாராகின்றான் உழைக்க
உடை விற்கிறான் பொருள் விற்கிறான்
உடம்பையும் சேர்த்து விற்கிறான்
கேள்வி எழுப்பினால் வயிற்றைக்
காட்டுகிறான் இதற்காகத்தான் என்று
சுய மரியாதை இல்லாமல்
கௌரவம் பாராமல்
உறவு மட்டும் இன்றி பிறரிடமும்
கை ஏந்துகின்றான் ஒரு சாண்
வயிற்றை நிரப்ப வழியில்லாமல்
மூச்சுப் போனால் உயிர் இல்லை
மூச்சு இழுக்கும் போதும் கடமைக்காக
என்று கூறி ஊத்துகின்றான் பாலை ஒரு சாண்
வயிற்றை நிரப்புவதிலே குறியாக
இருக்கின்றான் இறக்கும் தறுவாயிலும்
உண்மையைக் கூறி கேட்கிறான்
பொய் சொல்லியும் கேட்கிறான்
தட்டிப் பறிக்கிறான் உதைத்து வாங்குகிறான்
கொள்ளையும் அடிக்கிறான் கொலையும் புரிகின்றான்
வயிற்றுப் பிழைப்புக்கு என்று பெயர் சூட்டுகின்றான்
ஓராயிரம் குற்றம் புரிகின்றான்
சாட்சிக்கு ஒரு சாண் வயிற்றை
காட்டுகின்றான்.
அறிவு உள்ளவன் தன் வயிற்றையும்
நிரப்புகின்றான் பிறர் வயிற்றுக்கும்
சேகரிக்கின்றான் .
அறிவு கெட்டவன் தன் வயிற்றையே
போடுகின்றான் பட்டிணி
சாதி மதம் மொழி பாராமல்
அழைத்ததும் ஓட வைக்கும்
இந்த ஒரு சாண் வயிற்றுப்பசி மட்டுமே
புசிக்கக் கொடுப்போரை
தெய்வமாய் போற்றும்
வயிறு என்று ஒன்றைக் கொடுத்தே
மனிதனின் ஆட்டத்தின் பாதியை
அடக்கி விட்டான் இறைவன்
பசியைக் காட்டி சில கல் நெஞ்சம்
கொண்ட மனிதர்கள் அடிமையாக்கி
விட்டனர் அப்பாவி மக்களில் பலரை
பாவப்பட்ட ஜென்மம் இந்த உண்ணும்
உயிர இனம் அனைவரும்
ஆர் எஸ் கலா
இலங்கை