எமைப்பார்த்து நகைத்துவிடும்

Vinkmag ad

எமைப்பார்த்து நகைத்துவிடும்
( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா )

இலக்கியங்கள் இலக்கணங்கள் எவ்வளவு படித்தாலும்
தலைக்கனங்கள் போகாமல் தடுமாறி நிற்கும்பலர்
இருக்கின்றார் எம்மிடத்தில் எனநினைக்கும் வேளையிலே
இலக்கியமும் இலக்கணமும் எமைப்பார்த்து நகைத்துவிடும் !

பட்டங்கள் பலபெற்றும் பண்புதனைப் பறக்கவிட்டு
துட்டகுணம் மிக்கோராய் தூய்மையற்று நிற்குமவர்
பட்டங்கள் அத்தனையும் வட்டமிட்டு வானில்செல்லும்
காகிதப் பட்டங்களாகவன்றோ கண்ணுக்குத் தெரிகிறது !

பாடுபட்டுப் படிக்கின்றார் பலபதவி வகிக்கின்றார்
கூடுவிட்டுப் பாய்வதுபோல் குணம்மாறி நின்கின்றார்
கேடுகெட்ட செயலாற்றி கிராதகராய் மாறுமவர்
பாடுபட்டுப் படித்ததெல்லாம் பயனற்றே போகிறதே !

படிப்பறியார் பலபேர்கள் பண்புணர்ந்து வாழ்கின்றார்
பட்டம்பெற்ற படித்தவர்க்கோ பண்புபற்றிக் கவலையில்லை
மனம்போன போக்கிலவர் வாழவெண்ணி நிற்பதனால்
நயமான கல்வியினை நாசம்பண்ணி நிற்கின்றார் !

கீதையொடு குறள்படித்தும் பாதை தடுமாறுகின்றார்
போதையிலே நாளுமவர் புரண்டுமே உழலுகின்றார்
காதிலெவர் சொன்னாலும் கவனமதில் கொள்ளாமல்
மோதியே மிதிப்பதையே முழுமையாய் நம்புகின்றார் !

கற்றதனால் பயனென்ன எனக்கேட்ட வள்ளுவனார்
கண்திறந்து பார்த்தவர்க்கு கருத்துரைக்க வந்ததாலும்
கற்றகல்வி பட்டங்கள் காற்றிலவர் பறக்கவிட்டு
காசையே அணைத்தபடி கண்ணியத்தை பாரார்கள் !

News

Read Previous

கொடுத்த வாக்கை மீறாதே!

Read Next

உங்கள் தட்டில் உணவா…விஷமா ?

Leave a Reply

Your email address will not be published.