என்னிடம் ஏது சொற்கள்?

Vinkmag ad

என்னிடம் ஏது சொற்கள்?

– சென்னிமலை தண்டபாணி

வெள்ளிநிலா வெளிச்சத்தில், முல்லைப் பூக்கள்
வீசுகிற நறுமணத்தில், வண்டின் பாட்டில்
உள்ளத்தைக் கவர்ந்திழுக்கும் மழலைப் பேச்சில்
உயிருருக்கும் தனிமையிலே நெஞ்சை வந்து
கொள்ளையிடும் பறவைகளின் கலக லப்பில்
குத்தாட்டம் போடுகிற அலைவி ரிப்பில்
உள்ளூறும் கவியூற்றில் திளைத்த போதும்
உன்பார்வை அழகெழுதச் சொற்கள் இல்லை.

விரிவானம் வரைகின்ற கோல மெல்லாம்
வியப்பில்லை.. உவப்பில்லை..பார்த்தும் பாராச்
சிரிப்புதிர்க்கும்  உன்பார்வைப் பொருளை மட்டும்
சிந்தித்தும் புரியாத மர்மம் எண்ணி
வரிவரியாய் எழுதுகிறேன்.. வார்த்தை யெல்லாம்
மணப்பதையும் நானறிவேன்.. இருந்தும் என்னுள்
எரிகின்ற கேள்விக்கு விடையே இல்லை!
எழிற்பார்வைப் பொருளெழுதச் சொற்கள் இல்லை.

நொடிக்குநொடி நூறுவகைச் சிந்த னைக்குள்
நுட்பத்தைத் தேடுகின்றேன் என்ற போதும்
மடிக்காத தாழம்பூப் பெண்ணே! உன்றன்
மனத்திற்குள் ஓடுகின்ற நினைவை எண்ணித்
துடிக்கின்றேன்..புதுப்பாடம் படிக்கின் றேன்!உன்
தூயவிழிப் பார்வையென்ன சொல்லும் என்று
வடிப்பதற்குச் சொற்களைநான் தேடு கின்றேன்!
மலர்கின்ற அழகெழுதச் சொற்கள் இல்லை!

News

Read Previous

ஈரோட்டுக் கண்ணாடி வழியே மார்ச் 8

Read Next

தமிழில் பயன்படுத்துவது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *