உறுதிமொழி
மக்களுக்கு அன்பான வேண்டுகோள்
மாண்புமிகு தமிழக மக்களே ,
மாண்பில்லாத , மாண்புகளைநம்பி
மாண்பை இழந்தோம் நாமும், நம்
மாண்பு மிகு தமிழகமும்.
வீரத்திற்கும், விருந்தோம்பலுக்கும்
கலைக்கும், கலாச்சாரத்திற்கும் ,
தியாகத்திற்கும், தர்மத்திற்கும் ,
நீதிக்கும் , நிர்வாகத்திற்கும்
பார் புகழ இருந்த நம் தமிழகம்
ஊழலுக்கும், லஞ்சத்திற்கும்,
கொலை , கொள்ளைகளுக்கும் ,
அநீதிக்கும், துரோகத்திற்கும் ,
கடமை தவறும் நிர்வாகத்திற்கும்
பார் இகழும் வண்ணம் மாறியது .
நம்வசம் உள்ள ஓட்டைப்பெற்று பதவியை
தம்வசமாக்க நினைத்த , தரங்கெட்ட அரசியலார்
இலவசங்கள் என்னும் எலும்புத்துண்டைக் காட்டி
ஏமாற்றி வருவதை உணராதிருக்கிறோம்.
சிறிய மீனைப்போட்டு , பெரியமீன் பிடித்து
சீமான்களாக நினைப்போரை அறியாதிருக்கிறோம்.
கால்நடையாய்த் திரிந்த வட்டபிரதிநிதிகூட
கமிஷனிலும் , கட்டப்பஞ்சாயத்திலும் ,
கணிசமாய்ப் பணம் சேர்த்து ,
காரில் வலம்வருதல் கண்டும்
காணாததுபோல் இருக்கிறோம்.
வீடு கட்ட ஆரம்பித்தால் ,
ஓடிவந்து காசு கேட்கும்
கேடு கேட்ட கவுன்சிலர்களை
கேள்வி கேட்க யாருமில்லை .
நமது வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு
நம்மிடமே வேலை செய்ய கிம்பளமும் கேட்கின்ற
நம்மிடையே வாழ்ந்து வரும் அரசு ஊழியர்களை
நாம் எவரும் வெறுப்பதில்லை. வருமானத்திற்கதிகமாகக்
கொண்டுவரும் ஊழியரின் குடும்பமும் மறுப்பதில்லை.
புரட்சி செய்யச் சொல்லவில்லை , போராடச் சொல்லவில்லை
மிரட்சி கொள்ளத்தேவையில்லை , மிரட்டிடவும் சொல்லவில்லை
போடுகின்ற வோட்டுக்குக் காசெதுவும் வாங்காமல் ,
சாதி , மதம் , மொழி , இனம் , கட்சி என்று பாராமல்
நாணயமாய் , நாட்டு நலன் கொண்டவராய் இருப்போரை,
குற்றப்பின்னணிகள் இல்லாதிருப்போரை ,
தொகுதியில் இருப்போரை , தொகுதி நிலை அறிந்தோரை
தொகுதிக்கு சேவை செய்யும் தொண்டுள்ளம் கொண்டோரை
என்ன தருவார் என்று எதிர்பார்க்கும் எண்ணமின்றி
என்ன செய்வார் என்று எதிர்நோக்கும் மனம் கொண்டு
மணல் கொள்ளை அடிக்காமல் , மழைநீரை சேமிக்க
தடுப்பணைகள் கட்டி , தண்ணீரை சேமிக்கவும்
ஆக்கிரமிப்புகள் அகற்றி , ஆற்று வெள்ளம் தடுக்கவும்,
லஞ்சம் , ஊழல் தவிர்க்க , நெஞ்சில் உரம் கொண்டோரை
நம் தேசம், நம் மக்கள் , நலம் வாழ நினைப்போரை
வாக்களித்துத் தேர்ந்தெடுக்க உறுதிமொழி ஏற்றிடுவீர் .
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் ,
Tags: உறுதிமொழி