உண்ணா நோன்பின் உன்னத நோக்கம்
—-உண்ணா நோன்பின் உன்னத ——————நோக்கம்—————-
உண்ணா நோன்பிற்கும் ஒரு
உன்னத நோக்கம் உண்டு
புசிப்பதை குடிப்பதை தவிர்த்து
புவியில் அறம் செய்வதே அது
தேகம் வாழ உணவளித்தவன்
தாகம் தீர தண்ணீர் தந்தவன்
தற்காலிக தடை இரண்டிற்குமென்று
இனிய நோன்பை கடமை என்றான்
தாகம் தந்து தாக்கம் செய்தான்
சோகம் உணர பசியைத் தந்தான்
உணர்ச்சிகள் அடங்கச் செய்தான்
உள்ளங்கள் இணையச் செய்தான்
இல்லாதவரிடமும் அன்பை காட்டி
இரக்க உணர்வு சுரக்கச் செய்தான்
இல்லாமை எங்கும்இல்லாமல் போக
இவ்வுலகில் புதியபாடம் சொன்னான்
வீணே பசித்து இருப்பதிலும்
வீணே தாகித்து இருப்பதிலும்
ஏனோ அவனுக்கு உடன்பாடில்லை
ஏழைகள் நிலமை உணராத வரை
எல்லாமும் எல்லாருக்கும் என்று
எல்லாமும் பொதுவில் பகிர்ந்து
எல்லோரும் இன்பமுற்று வாழ
எங்கும் நீதி நிலைக்கச் செய்தான்
ஏற்றத் தாழ்வு இல்லாமல் போக
ஏழைவரியை கடமை என்றான்
சுழலும் செல்வம் சுற்றச் செய்தான்
சுபிட்சம் எங்கும் மலரச் செய்தான்
சுற்றமும் நட்பும் இன்புற்று வாழ
சுவையான உணவை பகிர்ந்து
சுத்தமான ஆடைகள் கொடுத்து
சுகமாய் அவர் வாழ வழி சொன்னான்
பிரிந்த உறவைச் சேரச் சொன்னான்
பிடித்த உறவை பேணச் சொன்னான்
ஒடிந்த உறவுகள் ஒட்டச் செய்தான்
ஒன்றிணைந்து வாழச் சொன்னான்
இரந்துண்டு வாழ்வதை விட
இறந்து போவதை மேல் என்றவன்
தான தர்மம் செய்யச் சொன்னான்
முரண்பாடாய் தெரிந்தாலும் அதிலும் முறையை வகுத்துச் சொன்னான்
வாழ்வற்றவர்க்கு ஈவது நன்றென்று
வழங்குவதற்கு வரைமுறை சொல்லி
வாழ்வில் வறியவர் நிலைமை உயர
வழிகள் பல வகுத்துச் சொன்னான்
நோன்பை நோற்பது கடமை
நோன்பால் அகல்வது மடமை
நோன்பில் அறம் செய்து வாழ்வது
தொழுது தூவாச் செய்து அழுவது
சொர்க்கம் செல்லும் வழி என்றான்
இனிய நோன்பை வரவேற்போம்
இல்லாமை இல்லாமல் செய்வோம்
இனியவை எங்கும் நிலவச் செய்வோம்
இம்மை மறுமை இரண்டிலும்
இணையில்லா இன்பம் பெறுவோம்
மு முகமது யூசுப். உடன்குடி