இருக்கின்றார் படமாக !

Vinkmag ad

இருக்கின்றார் படமாக !
( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் )

பட்சணங்கள் பலசெய்வார்
பக்குவமாய் ஊட்டிடுவார்
நட்டநடு ராத்திரியில்
நானழுதால் எழும்பிடுவார்

இஷ்டமுடன் எனையணைப்பார்
எக்கணமும் எனைநினைப்பார்
கஷ்டமின்றி நான்வளரக்
காரணமாய் இருந்தாரே

அவர்மடியில் படுத்துவிடின்
அரைநொடியில் தூங்கிடுவேன்
அவர்முகத்தைப் பார்ப்பதிலே
ஆனந்தம் அடைந்திடுவேன்

பள்ளிப் படிப்பறியார்
பலவிஷயம் தானறிவார்
வெள்ளை மனமுடையார்
விபரமாய் பேசிடுவார்

கள்ளமெலாம் செய்துவிடின்
கடுங்கோபம் காட்டிடுவார்
உள்ளமதில் அன்புடையார்
ஊரார்க்கும் உதவிடுவார்

பல்லில்லா வாயாலே
பலகதைகள் சொல்லிடுவார்
நல்லநல்ல விஷயமெல்லாம்
நயமாகப் புகட்டிடுவார்

கைதொட்டு பார்த்துவிடின்
கழன்றுவிடும் நோயெல்லாம்
கணநேர சிந்தனையில்
கண்டிடுவார் அத்தனையும்

திருமுறைகள் பாடிடுவார்
திருக்குறளும் கூறிடுவார்
எவர்வரினும் வீட்டினுக்கு
இன்முகமே காட்டிடுவார்

மனத்திலே துணிவுடையார்
வள்ளல்குணம் மிகவுடையார்
தனக்கெதுவும் சேர்த்துவையார்
தன்பாட்டில் மகிழ்ந்துநிற்பார்

குடுப்பமது குதூகலிக்கக்
கொடிபிடிப்பார் பாட்டியம்மா
குத்துவிளக் காயிருந்து
குலம்விளங்கச் செய்துநிற்பார்

பண்டிகை வந்துவிடின்
பாட்டிகாலில் விழுந்திடுவோம்
பாட்டிதரும் ஆசியினால்
பயனெல்லாம் வந்துநிற்கும்

பொங்கல் வந்துவிட்டாலே
பூரித்து நின்றிடுவார்
பொக்கைவாய் பாட்டிக்கு
பொங்கிவிட்டால் ஆனந்தம்

பொங்கலிலே பாட்டிநின்றால்
எங்குமே ஆனந்தம்
எங்கள்பாட்டி இப்போது
இருக்கின்றார் படமாக

News

Read Previous

அன்றாட உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டிய சில ஊட்டச்சத்துக்கள்

Read Next

பேனாவைக்கொல்ல முடியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *