இரக்கம் கொள்வீர் எம்மீது…
இரக்கம் கொள்வீர் எம்மீது…
—————————————–
டாக்டர் ஆக்குவேன்
என்ஜீனியர் ஆக்குவேன்
என சங்கல்பம் செய்யும் பெற்றோரே….
செய்வதற்கு நாங்கள் என்ன களிமண்ணா?
பொதிசுமக்கும் கழுதைகளுக்கும்
ஞாயிறன்று விடுமுறை.
பொதிசுமக்கும் எங்களுக்கோ ?
உணர்ச்சிகள் இல்லாத
கணிப்பொறி நாங்கள்!
அறியா வயதில்
ஆங்கிலக் கல்வியெனும்
எலிப்பொறிக்குள்.
பள்ளிக்குச் செல்வதற்கு
பொட்டலம் கட்டியெம்மை
அடைத்தனுப்பும் ஏதோ ஒன்று….
வாகனமா அது?
எந்திரப்பாடை.
பட்டம்விடும் வயதில்
பட்டதாரி ஆக்கிவிட
படாதபாடு படும்
பெற்றோரே!
உங்கள் ஆசைக்காக
பட்டாம்பூச்சி
பருந்தாகி விடுமா?
கிளைகளை பூக்களை
காய்களை கனிகளை
கனவுகாணும் உரிமை
உங்களுக்குண்டு!
வேருக்குள் வெந்நீர்
ஊற்றாத வரையில்!
அவனாக இவனாக
அதுவாக இதுவாக
நாங்கள் ஏன் மாறவேண்டும்?
கருணை காட்டுங்கள்!
கொஞ்சகாலமேனும் நாங்கள்
குழந்தைகளாய் வாழ்வதற்கு!
கவிமகன் காதர்
Tags: இரக்கம்