இனிய திசைகள்
பூக்காடு போல் தோன்றும் …
இனிய திசைகள்
———- அதிரை அருட்கவி தாஹா ——-
சிந்தனையால் சிலிர்ப் பெழுப்பும் சீரைச் சேர்க்கும்
சீர்தூக்கி உலகத்தின் செய்தி சொல்லும்
சந்தனத்தை அரைத்தெடுத்துச் செய்த சொற்கள்
அழகுணர்ச்சி காட்டிமணம் அள்ளி வீசும் !
சொந்த உயிர் காப்பதுபோல் சமுதாயத்தின்
சுகம்துக்கம் அனைத்திலுமே சொந்தம் காட்டி
முந்திநின்று தொண்டு செய்யும் மனங்கள் தேற
உந்துதலை உருவாக்கும் இனிய திசைகள் !
சரித்திரத்தை அறியாத சமுதாயங்கள்
சரிந்துவிடும் ! சஞ்சலத்தில் மிஞ்சி நிற்கும் !
உருத்தெரியாப் போகாதோ சமுதாயத்தின்
உண்மைகளை வெளிச்சமிட்டே உணர்ச்சி யூட்டி
கருத்தூன்றிக் களமிறங்கச் செய்யும் ! பழிகள்
கடந்தோடச் செய்துவிடும் புல்லாங் குழலாய்
வருமோசை ! இதயத்தின் ஓசை ! ஓசை !
வந்தூட்டும் ஒற்றுமையை இனிய திசைகள் !
அத்திக்குள் ஆயிரமாம் வித்தி ருக்கும் !
அட ! இந்தப் பத்திரிகை அத்தி வித்தாய்
வைத்திருக்கும் புத்தம்புது செய்தி யெல்லாம்
வாழ்த்துரைக்கும் தலையங்கம் அரசைப் பேசும்
நித்தம்நடை முறைகாணும் சமுதாயத்தின்
நிகழ்வுகளைப் படம்பிடிக்கும் மனத்தில் ஒட்டும்
புத்தம்புதுச் செய்திச்சரம் தொடுத்து ரைக்கும்
பூக்காடு போல் தோன்றும் இனிய திசைகள் !
இனத்தார்க்கு மற்றஇனம் செய்யும் கொடுமை
இனங்காட்டும் எல்லோரும் சமமே என்ற
மனிதநேய மாண்புரைக்கும் அமைதி காக்கும் !
மருந்தாக்கிக் கவிதைகளை வண்ணம் தீட்டி
இனித்திடவே செய்யாதோ நெஞ்சே ! கவிஞன்
இருக்கின்றான் சமூகத்தின் தூண்என் றோதும் !
பனிக்கின்ற கண்ணீரும் காட்டும் பதைக்கப்
பகர்கின்ற செய்திகளால் இனிய திசைகள் !
எல்லோர்க்கும் தேவையான புதையல் தானே
எழுந்துவரும் தென்றலென “இருப்பும் பொறுப்பும்!”
பல்லோர்க்கும் பிடிப்பதுதான் கதைகள் ! கதைகள் !
படர்ந்துவரும் கொடியாகும் பண்பை ஊட்டும் !
இல்லாது போனாலோ சுவர்தான் அங்கே
இருந்திடுமோ சித்திரம் ? உடல்பேணாது
நல்லுயிரும் நடமாடா ! மருத்துவத்தின்
நலமுரைக்கும் நல்லே டாம் இனிய திசைகள் !
கல்விக்கு மிகத்தூண்டும் கருத்தளிக்கும்
கற்ற பின்னர் வேலைக்கு வாய்ப்புச் சொல்லும்
மல்லுக்கு நிற்பதையே வெறுக்கும் மனித
நேயத்தை மட்டுந்தான் வரவில் வைக்கும் !
சொல்லுக்குள் மிக உயர்ந்த குர்ஆன் சொல்லைச்
சொல்லிச் சொல்லி வழிகாட்டும் ! கேள்வி கேட்டால்
சொல்லும்பதில் பளிச் சென்றே ! எளியர் வாழ்வை
சுகமாக்கும் திருமணத்தால் இனிய திசைகள் !
நன்றி
இனிய திசைகள் – ஜுலை 2014