அமைதி… அகிம்சை
அமைதி… அகிம்சை
——————————-
பிரளயத்திற்குப் பின்
புன்னைகைக்கும்
அரும்பாகும் அமைதி
அதன் பூவாகும் நிம்மதி…
கலிங்கத்துப் போருக்குப் பின்
கலங்கியது மன்னன் மனம்…
வெற்றிக்குப் பின்புலமாய்
வற்றிய பல உயிர் கண்டு
சமர் சிந்தும் செங்குருதி
இனி இல்லை என்னும் புத்துறுதி
பூண்டபின் ஆனதுதான்
அசோக மனம்… அது அமைதி வனம்
ஆக… அகிம்சையே அமைதி.
சித்தார்த்தன் பிஞ்சு மனம்
சஞ்சலத்தால் கலங்கியது…
மோதி வரும் துக்கத்தை
போதிமரம் துடைத்ததுவே….
மனித வாழ்வின் மமதையெல்லாம்
மரண மடியில் அமைதியுறும்….
ஆசை அழிக்குமென்றால்
நிராசை அமைதி தரும்….
ஆக …மனிதமே அமைதி.
புகுத்துதல் அல்ல அமைதி…
புரிதல்…..
விரும்புவது அல்ல அமைதி
உணர்தல்…
புரிவோம்…உணர்வோம்..
பாருக்குள் மனிதத்தால்
பாசம் செய்வோம்…
அகிம்சையின் கூரைக்குள்
அமைதியாய் அமிழ்ந்திருப்போம்.
கவிமகன்