அன்பின் மழை
அன்பின் மழை
திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்
thahiruae@gmail.com
- தம் சக மனித இனம்
அணைக்கட்டுகள் நிரம்பி
வெளியேற்றப் பட்ட போது
அன்பு மனம் கொண்டு
கட்டியணைத்து
அவர்களை வரவேற்றார்கள் பலர் !
- நீர்
பலரின் உடமைகளை எடுத்துச் சென்றதால்
கண்ணீரோடு இருந்தவர்களுக்கு
அவர்கள் உணவும் உடையும் கொடுத்து
அரவணைத்தார்கள்!
- அலை இந்து சகோதரனை
அடித்துச் செல்ல வந்த போது
முஸ்லிம் சகோதரன் தடுத்து காப்பாற்றினான்!
கிறிஸ்தவ சகோதரனை
வெள்ளம் கொண்டுச் செல்ல வந்த போது
இந்து சகோதரன் கை பிடித்து காப்பாற்றினான்!
- வார்த்தைகளால்
ஏசிய மனிதர்கள்
அன்பால் பேசிக் கொண்டார்கள்!
- மனிதாபிமானத்தில்
எல்லா மக்களும்
முன்னணியில் இருந்தார்கள்!
அரசியல்வாதிகள்
அனைவரும் அங்கே தோற்றுப் போனார்கள்!
- பள்ளிவாசலில் இந்துக்கள்!
கோவிலில் சென்று உணவளித்த முஸ்லிம்கள்!
மத வெறியர்கள் எல்லாம்
மறைந்துப் போனார்கள்!
- காந்தியின் வரலாற்றில்
புதிய பதிப்பு வெளியிடப் பட்டது!
“மக்களை காப்பாற்ற வந்த
அனைவரும் மகாத்மாக்கள்” என,
இந்திய வரலாறு
புதிதாய் எழுதப் பட்டது!
- கடவுளுக்காக மட்டுமே
திறக்கப் பட்ட வணக்கஸ்தலங்கள்
மனிதர்களுக்காக திறக்கப் பட்டன!
மதத் தளங்களில்
மதங்கள் மறக்கப் பட்டு
மனிதர்கள் வரவேற்கப் பட்டார்கள்!
- நிறைய பாபரி மசூதிகள்
நாடு முழுவதும்
கட்ட முடிவுச் செய்யப் பட்டது!
தொழ மட்டுமல்ல
ஆபத்துக் காலத்தில்
அனைத்து மக்களும் அவற்றில் தங்கிடவும்தான்!
- அன்பின் மழை
அடிக்க தொடங்கிய போது
அடை மழை நின்றுப் போனது!
கருணை வெள்ளம்
திரண்டு வந்த போது
கரை புரண்ட வெள்ளம் வடிந்து போனது!
—————————————————–