அண்ணா
“அண்ணா … அண்ணா…”
வெற்றிலையின் காவிபடி பல்லும் – மேலே
வெறும் வார்த்தை சிந்தாத உதடும்
வற்றாத இளமை சொல்லும் மீசை – என்றும்
மங்காத சோதி எனும் நுதலும் – கண்டோர்
அறிஞர்க்கும் அறிஞரிவர் என்னும் வண்ணம்
அளந்தளந்து நயத்தோடு பேசும் பேச்சும்
உருவாகி வந்துற்ற நிலையிற் றோன்றும்
உயர் குணத்தார்; படையினிலே முன்னிற் கின்றார்!
குன்றாத மனவளத்தான்; கவிதைச் செல்வன்
குறைவுபடா எழுத்தாளன்; அறிவுத் தோட்டம்
அன்றாடம் ‘விடுதலை’யில் வரைந்த சொல்லால்
அறிவுலகப் பாதையிலோர் புதுமை கண்டோன்;
திண்டோளும் மாங்கனியை வகிந்தாற் போலச்
சிவந்துவரும் புன்னகையும் வாலி பர்முன்
நின்றோடும் காதலிபோல் தவழும் பேச்சும்
நிறைவேந்தன் ‘துரை’ என்றார்! அண்ணா என்றார்!
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் தொகுதி 1 & 2 நூலில் இடம்பெற்றுள்ள கவிதையிது..
பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் உங்களோடு பகிர்வு…
Tags: அண்ணா