ஆங்கிலம் கற்பிப்பதில் கவனம் வேண்டும்!
ஆங்கிலம் கற்பிப்பதில் கவனம் வேண்டும்!
தாய்மொழி தவிர்த்த ஆங்கிலம் என்பது வெற்றிகரமான அணுகுமுறை அல்ல என்பதையே உலகளாவிய அனுபவங்கள் நமக்குச் சொல்கின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டின் தாய்மொழியுடன் கூடிய ஆங்கிலம் எனும் இருமொழிக் கொள்கையே சிறந்த ஒன்றாகும். அதேசமயம், தாய்மொழியோடு கூடவே அளிக்கும் இன்னொரு மொழி எனும் இடத்தில் இந்திய மக்களின் ஏகோபித்த ஆதரவை ஆங்கிலம் பெற்றுவருவதானது, இப்படிப்பட்ட சூழலில் இன்னும் எவ்வளவு காலத்துக்கு ஆங்கிலத்தை அந்நிய மொழியாகவே கருதப்போகிறோம் என்ற கேள்வியையும் எழுப்புகிறது. அதாவது, ஆங்கிலத்தையும் இந்திய மொழியாகக் கருத வேண்டிய காலக் கட்டாயத்தை நாம் அடைந்துவிட்டோம் என்பதையே இது நமக்குச் சொல்வதாக இருக்கிறது.
ஆங்கிலம் எனும் ஆயுதம்
தமிழ்நாடு இன்றைக்குச் சமூக-பொருளாதாரத் தளங்களில் இந்திய அளவில் அடைந்திருக்கும் முன்னேற்ற நிலைக்கு ஆங்கிலமும் ஒரு முக்கியமான கருவி என்பது சகல தரப்புகளாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஓர் உண்மை ஆகும். இந்தியாவில் தாய்மொழி தவிர, அதிகளவில் பயன்படுத்தப்படும் இரண்டாவது மொழியாகப் பெரும்பாலும் ஆங்கிலமே இருந்துவருகிறது; இந்தியாவின் எந்த மூலையிலும் செல்லுபடியாகும் மொழியும் அதுதான். இன்று ஆங்கில வார்த்தைகளைச் சேர்க்காமல் பேசப்படும் இந்திய மொழி எதுவுமே இல்லை. இன்னொரு பக்கம், அனைத்து மொழிகளிலிருந்தும் வார்த்தைகளைப் பெற்று வளப்படுத்திக்கொள்ளும் மொழியாகவும் ஆங்கிலம் விளங்குகிறது. அறிவியல் உள்ளிட்ட அறிவுத் துறைகளில் சர்வதேச அளவில் அதன் வேகத்துக்குத் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் ஒரு மொழி இல்லை. ஆக, ஆங்கிலத்தை ஒரு சமூகம் கையில் எடுப்பதானது அறிவுலகோடு நெருக்கமாக்கிக்கொள்வதாகிறது. ஆனால், அதற்கான சிறந்த வாசல் தாய்மொழிதான்!
ஆசிரியக் கட்டமைப்பு
தாய்மொழி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளின் வாயிலாகவும் மாணவர்களுக்கு வெற்றிகரமாக வகுப்புகளை நடத்த முடியும். அடிப்படைக் கல்வியைத் தாய்மொழியில் பயிற்றுவித்தபடியே அவர்களின் ஆங்கில மொழித் திறனையும் வளர்த்தெடுக்க முடியும். ஏனைய பாடங்களைக் கற்பிப்பதில் நாம் காட்டும் அக்கறையை மொழிப் பாடங்களுக்கு முதலில் அளிக்க வேண்டும். பள்ளிக்கூடங்களை விட்டு ஒரு பிள்ளை வெளியேறுகையில் குறைந்தபட்சம் இரு மொழிகளில் நன்றாக எழுதப் படிக்கப் பேசத் தெரியும் என்ற சூழல் உருவாக்கப்பட வேண்டும். தமிழகம் இந்த விஷயத்தில் பின்தங்கிவிடக் கூடாது!
(அக்டோபர் 12 தமிழ் இந்துவில் திரு.எஸ்.ராஜகோபாலன் எழுதிய கட்டுரையிலிருந்து)