மனம் கலங்கினால் முன்னேற முடியாது
மனம் கலங்கினால் முன்னேற முடியாது
*போர்க்களத்தில் நாம் நிற்கிறோம். சக போராளிகள் செத்து விழுவதைப் பார்த்து மனம் கலங்கினால் முன்னேற முடியாது. இப்போரில் எதிரி கொரோனா அல்ல. கொரோனா நம் எதிரியின் கேடயம்.
*நாம் ஆக்சிஜன் பற்றிய கவலைகளில் இருக்கையில், அவன் லட்சத்தீவை விழுங்குகிறான். என்.ஐ.ஏ அலுவலகத்தை வேளச்சேரியில் திறக்கிறான். மதுரையில் பல கணினிகளைக் கைப்பற்றுகிறான், சமூக வலைத்தளம் மட்டுமே நமக்கான சிறிய சுதந்திர வெளியைத் தந்தது அதையும் சட்டம் போட்டுக் கையில் எடுக்கிறான், புதிய கல்விக்கொள்கையை கறாராக வேகமாக அமல்படுத்துகிறான்.. விவசாயிகளை ஆறு மாதமாக “சாவுங்கடா”… என்று பட்டியல் நீள்கிறது..
அவன் அவனுடைய நிகழ்ச்சிநிரலை தங்குதடையின்றி அடிச்சு நவுத்திக்கொண்டிருக்கிறான். சில மாநிலத் தேர்தல் வெற்றிகளையுமே ‘கவனம் திருப்பலுக்கான‘ ஒன்றாக அவன் மாற்றுகிறான். சிவில் சமூகத்தைக் கைப்பற்றும் அவன் அஜண்டா தங்குதடையின்றி முன்னோக்கிச் செல்கிறது.
கொரோனோவை போன அலையில் முஸ்லீம் எதிர்ப்புக்கு பயன்படுத்தினான். சட்டங்கள் பலவற்றை நிறைவேற்றப் பயன்படுத்தினான். இப்போது கொரோனா கவனம் நமக்கு, கொண்டாட்டம் அவனுக்கு….
*லாக் டவுன் முடிந்து, அலை முடிந்து… என்று நம் மனநிலையே “தள்ளிப்போடும்” மனநிலை ஆகிக்கொண்டிருக்கிறது. கண்ணீரைத் துடைத்துக்கொண்டு முன்னேறும் போர் வீரனைப்போல, நாம் இன்றைய காலத்துக்கான ஒரு போராட்ட வடிவத்தையும் முழக்கங்களையும் உருவாக்க வேண்டும். பாசிஸ்ட்டுகளின் நயவஞ்சக வலையாக கொரோனா பயம் மாறிவிடக்கூடாது.*
அவன் அஜெண்டாவில் அவன் சற்றும் பின் வாங்காதபோது, நாம் அப்புறம் என்று தள்ளிப்போட முடியாது. கொரோனாவுக்கு எதிரான போரை நடத்திக்கொண்டே இப்போதே இதையும் கையிலெடுக்க வேண்டும்.
– எழுத்தாளர் தோழர் ச. தமிழ்ச்செல்வன்