செலவில்லா விவசாயம்

Vinkmag ad
செலவில்லா விவசாயம்
 
சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில், இயற்கையின் மூலங்களான மண், நீர், சூரிய ஒளி மற்றும் காற்று ஆகியவற்றை, அறிவியல் முறையில் ஒழுங்கு படுத்தாத காரணங்களால், பயிர் விளைச்சல் குறைவாய் இருந்தது. இரண்டாம் உலகப்போர் காலத்தில், வெடிமருந்திற்காக உற்பத்தி செய்யப்பட்ட அம்மோனியா பல உலக நாடுகளில் தேங்கி இருந்தது. அப்பொழுது, அது பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும் என்று கண்டார்கள். உணவுப் பற்றாக்குறை இருந்த நாடுகளுக்கு அம்மோனியா மற்றும் பிற இரசாயனப் பொருட்கள் பரிந்துரைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்தியாவிற்கும் வந்தன. 
 
கன்னி நிலம் என்றதால், நுண்ணுயிர்ச்சக்தி மிகுந்து இருந்ததால், இரசாயன வன்மையை சில காலம் தாக்குப் பிடித்தது. பின்பு, நிலங்கள் மலடாயின. அதிக உரங்களும், பூச்சி மருந்துகளும், நிலத்தை மேலும் பாலையாக்கியது. தண்ணீரை நஞ்சாக்கியது. புல்லோ, புழுவோ தோன்றவே முடியாத நிலை உருவாகியது. விவசாயக் கடன் தொல்லையால், இலட்சக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இரசாயன விவசாயத்தால், இவ்வளவு தீமைகளைப் பார்த்த பிறகும், ஒரு சிலர், தங்கள் சொந்த நலனுக்காக, இரசாயன விவசாயத்தைத் தூக்கிப் பிடிக்கின்றனர். 
 
விவசாயத் துறைகளில் பணிபுரிந்த நம்மாழ்வாரும், சுபாஷ் பாலேக்கரும் இரசாயன விவசாயத்தால் நேரும் பிரச்சனைகளை வெறும் வாய்மொழியாக மட்டும் கூறாமல், பாரம்பரிய இயற்கை விவசாயத்தை, அறிவியல் பூர்வமாக எப்படி மேம்படுத்துவது, மகசூலை உயர்த்துவது என நடைமுறையில் சாதித்துக் காட்டினர். பல புதிய விவசாய நுணுக்கங்களையும் அறிமுகப்படுத்தி உள்ளனர். நம்மாழ்வாரால்தான், தமிழ்நாட்டில், இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு பரவலாகியது. குறிப்பாக, மகாராட்டிரத்தைச் சேர்ந்த சுபாஷ் பாலேக்கர், “பூச்சியம் செலவு இயற்கை விவசாயம்” (Zero Budget Natural Farming) என்பதை அறிமுகப்படுத்தி மிகப் பெரும் வெற்றி கண்டுள்ளார். அதை, விரிவாகக் காண்பதற்கு முன், விவசாயிகள், கீழ்க்காணும் இயற்கை மூலங்களைப் பற்றிய அறிவும், தெளிவும் பெறவேண்டியது மிக அவசியம்.     
 
 
மண்:
விவசாயிக்கு, மண்ணைப் பற்றிய அறிவு மிக அவசியம். தன்னுடைய நிலத்து மண், களிமண்ணால் ஆனதா, மணலால் ஆனதா, சவுட்டு மண்ணால் ஆனதா, எந்த விகிதத்தில் அவை மண்ணில் கலந்துள்ளன என அறிய வேண்டும். மண்ணின் இயற்கையான தன்மை மற்றும் நுண் சத்துகளின் பண்பைப் பொறுத்துப் பயிர் செய்ய வேண்டும். அல்லது, தான் விரும்பும் பயிரை வளர்க்க, மண்ணை அப்பயிருக்கேற்ற வளமுடையதாக மாற்ற வேண்டும். 
 
எல்லாப் பயிர்களும் நன்கு வளரக்கூடிய மண்ணை, பொறை மண் (Loamy Soil)  என்கிறோம். நீரைத் தக்க வைக்கும் தன்மையும், காற்று இறக்கம் கொண்ட தன்மையும் கொண்ட மண்ணை, பொறை மண் எனலாம். மனிதரைப் போலவே, தாவரத்திற்கும், உயிர்வாழ மண், நீர், காற்று, வெப்பம் அவசியமாகின்றன. இயற்கையாக அவை கிடைக்காமல் போனால், மனித முயற்சியால், அவற்றைப் பயிர்களுக்குக் கிடைக்கச் செய்தால், விளைச்சல் சிறப்பாக இருக்கும். 
 
20% களிமண், 40% மணல், 40% சவுட்டு மண் கலந்த கலவை, பொறை மண் எனப்படுகின்றது. மண்ணை ஆய்வு செய்து, தேவையானதைக் கூட்டியோ, மிகையானதைக் கழித்தோ, எல்லாப் பயிர்களுக்கும் ஏற்ற வளமுடைய பொறை மண்ணாக மாற்றலாம்.
 
நீர்:
“நீரின்றி அமையாது உலகு” எனும் திருவள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப, உலகின் எல்லா உயிர்களுக்கும் நீர் அவசியமாகின்றது. சிறிய தாவரம் முதல், பெரிய யானை வரை, நீர் முக்கிய தேவை. தண்ணீர் ஓடும் தன்மையுடையதால், அது ஓடும் வழியில் உள்ள பலருக்கும் உரியதாகிறது. மழைநீரின் பெரும்பகுதி ஓடோடி கடலில் கலந்து, விவசாயத்திற்கு இல்லாமல் போய்விடும் என்பதால், நீரைத் தேக்கி சேமிக்க வேண்டியதாய் உள்ளது. பெரும் அளவு நீரை ஒரே இடத்தில் சேமிக்காமல், ஏரி, குளம், குட்டை போன்று பல்வேறு நீர்த்தேக்க நிலைகளில் சேமிப்பதன் மூலம், நிலத்தடி நீரின் மட்டம் பரவலாக உயரும்; எளிதாகப் பாசனம் செய்ய முடியும்; காற்றின் ஈரப்பதமும் இயன்றவரை பொதுப்படையாக இருக்கும்; சூரிய வெப்பமும் பதமாக இருக்கும். மொத்தத்தில், உயிர்கள் வளமுடன் வாழ, நீர் ஏதுவாக இருக்கும்.
 
இயற்கையின் மூலங்களில், நீரை மட்டுமே ஒப்பீட்டளவில் எளிதில் ஒழுங்கு செய்ய முடியும். நீர்வளம் மிகுந்தால், பயிர்வளம் மிகும். விவசாய உற்பத்திதான் முதன்மையாக மூலதனத்தைக் குவிக்கும் தன்மையுடையது. எனவேதான், அறிவுள்ள அரசுகள் யாவும், பரவலான மக்கள் பயன்பெறுமாறு, நீர் மேலாண்மையை நிர்வாகம் செய்யும். கல்லணையைக் கட்டிய கரிகாலனை மட்டும் புகழ்ந்து கொண்டிருந்தால் போதுமா? பின்பற்ற வேண்டாமா?
 
மண்ணின் தன்மையைப் போலவே, நீரின் தன்மையும் பயிரை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது. நீரகத்திறம் – நீ.தி. (pH – Potential of Hydrogen) எந்த அளவு இருக்கின்றது என்பதைப் பொறுத்து, நீரின் வளமை குறிக்கப்படுகின்றது. அளவுகோலில், 5.5 முதல் 7.0 வரை நீ.தி. இருப்பது, பொதுவாக பயிர்களுக்கு நல்லது. சமையல் சோடா, நீ. தி. யை உயர்த்தும். காடி அல்லது எலுமிச்சஞ்சாறு, நீ.தி. யை குறைக்கும்.
 
சூரிய ஒளி:
தாவரங்கள், பயிர்கள், மரங்கள் ஆகிய யாவும், பூமியிலிருந்து வேர்கள் வழியே உறிஞ்சும் நுண்சத்துகள் கரைந்த நீரை, புல், இலை, தழைகளின் மேல் படும் சூரிய ஒளியைக் கொண்டும், காற்றில் கலந்துள்ள கரி அமில வாயுவைக் கொண்டும்,  சக்கரை ஆற்றலாக மாற்றுகின்றன. மற்றும் நீர் ஆவியுடன், உயிர்வாயுவையும் வெளிவிடுகின்றன. மாற்றப்பட்ட சக்கரை ஆற்றல், தாவர, பயிர், மரங்களின் இயக்கத்திற்கும், வளர்ச்சிக்கும், சேமிப்பிற்கும் உதவுகின்றது.
 
ஆனால், சூரிய ஒளி மிகுந்தால், தன்னை வெப்பத்திலிருந்து காத்துக் கொள்ள, பயிர்கள் ஏராளமான தண்ணீரை உறிஞ்சி ஆவியாக்குகின்றன. போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், சேமித்த தண்ணீரைச் செலவு செய்துவிட்டு, காய்ந்து வாடிவிடுகின்றது. சூரிய வெளிச்சம் குறைந்தால், நீரும், நுண்சத்துகளும், கரி அமில வாயுவும் இருந்தும், போதுமான சக்கரையையும், உயிர்வாயுவையும் உருவாக்க முடியாது. விளைவாக வலுவிழந்து நிற்கும். விளைச்சலும் இருக்காது. 
 
எனவே, பயிரின் தேவை, நீரின் இருப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, பயிர்களின் மேல் படும் சூரிய ஒளியைக் கட்டுப்படுத்த வேண்டும். நிழல்வலைக் கூரை, பசுங்குடில் ஆகியவை, சூரிய வெப்பத்தை ஒழுங்குபடுத்த உதவும்.
 
காற்று:
தாவரங்களுக்குத் தேவையான அடுத்த மூலம், காற்றில் உள்ள கரி அமில வாயு. பசுங்குடில் அமைத்தாலும், காற்றோட்டம் தேவை. வெப்பக்காற்று, புயல், சூறாவளியிலிருந்தும் பசுங்குடில் காக்கும்.   
 
பூச்சியம் செலவு இயற்கை விவசாயம்” (Zero Budget Natural Farming):
இரசாயன விவசாயத்தில் நட்டம் வருவதற்குக் காரணம், விளைச்சல் குறைவு மட்டும் அல்ல. அதற்கு இடப்படும் இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் போன்றவற்றிற்கான செலவுகள், கிடைக்கும் மகசூலின் விலையைக் காட்டிலும் மிகுந்திருப்பதே. எனவே, விவசாயத்தில் இலாபம் பார்க்க வேண்டும் என்றால், இடுபொருட்களின் செலவைக் குறைப்பதே. எவ்வளவுக்கு எவ்வளவு செலவைக் குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு இலாபம் ஈட்ட முடியும். இதுதான், பூச்சியம் செலவு இயற்கை விவசாயம் தோன்றக் காரணம். விலையுயர்ந்த இரசாயன இடுபொருட்கள் இன்றி, மலிவான இயற்கை இடுபொருட்கள் கொண்டு விவசாயத்தால் அதிக இலாபம் ஈட்டுவதே இதன் கொள்கை. கீழே, பூச்சியம் செலவு இயற்கை விவசாயத்தின் அடிப்படைகளைக் காண்போம்.
 
விதை, மண், பயிர் வளமாக்கல்:
 1. விதை அமிழ்தம்:
நல்ல விதை, நல்ல பயிர். பயிர்கள் நன்கு வளர, விதைகள் தூய்மையாகவும், சக்தியுள்ளதாகவும், வலிமையாகவும், பாதுகாப்புடையதாகவும் இருக்க வேண்டும். அதற்கு, விதைகளை அப்படியே விதைக்காமல், பதப்படுத்தி விதைப்பது எப்படி? 
தண்ணீர், மாட்டுச்சாணம், கோமியம், சுண்ணாம்பு, கைப்பிடிமண் ஆகியவற்றை, சரியான விகிதத்தில், ஒன்றாய் கலப்பதே விதை அமிழ்தம். 
தேவையான பொருட்களின் விகிதம்:
அ) தண்ணீர் – 20 லிட்டர்
ஆ) நாட்டு மாட்டுச் சாணம் – 5 கிலோ
இ) நாட்டுப் பசுமாட்டுக் கோமியம் – 5 லிட்டர்
ஈ) சுண்ணாம்பு – 50 கிராம்
உ) வரப்பு மண் – கைப்பிடி
 
செய்முறை: 
1. 5 கிலோ நாட்டு மாட்டுச் சாணத்தை, ஒரு துணியில் கட்டி, 20 லிட்டர் தண்ணீரில், 12 மணி நேரம், தொங்கவிடுங்கள். 
2. மேற்கிடைத்த கசாயத்தில், 1 லிட்டர் எடுத்து, 50 கிராம் சுண்ணாம்பைக் கலக்குங்கள். ஒரு இரவு, கலங்கல் படியும் வரை வைக்கவும். 
3. அடுத்த நாள், மாட்டுச் சாண மூட்டையை, சாறு முழுதும் இறங்குமாறு பிழிந்து விடுங்கள்.
4. மாட்டுச் சாணத் தண்ணீரில், தூய்மையான கைப்பிடி வரப்பு மண்ணை இட்டுக் கலக்குங்கள்.
5. சாணக்கலவையுடன், 5 லிட்டர் கோமியத்தையும், சுண்ணாம்புக் கலவையையும் கலக்குங்கள்.
 
பயன்படுத்தும் முறை:
விதை அமிழ்தத்தில், விதைகளை முக்கியோ, ஊறவைத்தோ, விதைகளின்மீது தெளித்தோ, உலர்த்தி, விதைகளை நிலத்தில் தூவுவதன் மூலம், விதைகளின் மேல் படர்ந்திருக்கக்கூடிய மாசு, தீங்கு விளைவிக்கக் கூடிய நுண்கிருமிகள் அகற்றப்படும்; விதைகள், வீரியமுடன் முளைக்கவும், வளரவும் உதவும்; முளை விட்டு வேர் இறங்கும்போது, சில தீங்கு செய்யும் நுண்கிருமிகளிலிருந்தும், வேரைப் பாதுகாக்கும். இக்கலவையை 48 மணி நேரத்திற்குள் பயன்படுத்துங்கள்.
 
 
2. பயிர் அமுதம்:
மண்ணில் உள்ள சத்துகளை, நேரடியாக, பயிர்களால் எடுத்துக் கொள்ள முடியாது. நுண்ணுயிர்கள் மண்ணை உண்டு, எச்சங்களை வெளியிடுகின்றன. அவைதான், தண்ணீரில் கலந்து, தாவரங்களுக்கு வளர்ச்சிதரும், வலிமைதரும் உணவாகின்றன. 
பயிர் அமுதம், இலட்சக்கணக்கான நுண்ணுயிர்களை, கோடிக்கணக்காகப் பெருக்குகின்றது. பயிர் அமுதக் கரைசலில் உள்ள நுண்ணுயிர்களை மட்டுமல்லாமல், மண்ணில் உள்ள மண்புழுக்கள் மற்றும் நுண்ணுயிர்களின் இயக்கத்தையும், எண்ணிக்கையையும், ஆற்றலையும் உயர்த்தும். பயிர் அமுதக் கரைசல், பூஞ்சை, தீமை செய்யும் நுண்ணுயிர்களிடம் இருந்தும், பயிர்களைக் காக்கும்.  
தேவையான பொருட்களின் விகிதம்:
அ) தண்ணீர் – 200 லிட்டர்.
ஆ) நாட்டுப் பசுமாட்டுச் சாணம் – 10 கிலோ.
இ) நாட்டுப் பசுமாட்டுக் கோமியம் – 5 -10 லிட்டர்.
ஈ) வெல்லம் – 2 கிலோ.
உ) பருப்பு தானிய மாவு – 2 கிலோ.
ஊ) வரப்பு மண் – கைப்பிடி.
 
செய்முறை:
1. 200 லிட்டர் தண்ணீரைப் பெரிய பீப்பாயில் எடுத்துக் கொள்ளுங்கள்.
2. 10 கிலோ சாணத்தையும், கோமியத்தையும் தண்ணீரில் கலந்து விடுங்கள்.
3. 2 கிலோ வெல்லம், 2 கிலோ தானிய மாவு, கைப்பிடி வரப்பு மண்ணையும் தண்ணீரில் கலந்து விடுங்கள்.
4. மொத்தக் கரைசலையும் நன்கு கலக்கி, 48 மணி நேரம் புளிக்க விடுங்கள்.
 
பயன்படுத்தும் முறை:
பிறகு, பயிருக்குத் தண்ணீர் பாய்ச்சும்போது, கரைசலைக் கலந்து விடவும் அல்லது 10% ஐ, நீரில் கரைத்து நேரடியாகப் பயிருக்கு அளிக்கவும்.
 
 
3. நுண்ணுயிர் பாதுகாப்பு மூட்டம்:
இயற்கையாகவே மண்ணில் இருக்கும் நுண்ணுயிர்களும், பயிர் அமுதத்தால் உருவாக்கிய நுண்ணுயிர்களும், 25 – 32 பாகை வெப்பநிலை, 65 – 72 பாகை ஈரப்பதம், இருள்நிலைகளில் நன்கு இயங்கி, மண்ணில் உள்ள நுண்சத்துகளை வெளித்தள்ளும். பருத்தல்வாயு (Nitrogen), மணிச்சத்து (Phospate), சாம்பல்சத்து (Potash), இரும்புச்சத்து (Iron), கந்தகம் (Sulphur), சுண்ணாம்புச்சத்து (Calcium) ஆகிய பயிர்களுக்குத் தேவையான, நீரில் கரையும் நுண்சத்துகளை, நுண்ணுயிர்கள் மண், நீர், வெப்பம், காற்றிலிருந்து உருவாக்குகின்றன. 
நுண்ணுயிர்களுக்கு ஏற்ற தட்பவெப்பச் சூழலை உருவாக்க, மூட்டங்களைப் போடலாம். மூட்டங்களால் மேலும் மூன்று பயன்கள் உண்டு. அ) காற்றோட்டம் ஆ) தண்ணீரை இருத்துதல் இ) களைகள் கட்டுப்படல்.
மூன்று வகையான நுண்ணுயிர் பாதுகாப்பு மூட்டங்கள் உள்ளன. மண், நெல் தாள், தாவரம் கொண்ட மூட்டங்களால், நுண்ணுயிர்களைப் பாதுகாக்கலாம். 
 
 
4. ஈரப்பதம் – காற்றோட்டம்:
பயிருக்கு 50% ஈரப்பதமும், 50% காற்றோட்டமும் இருக்க வேண்டும். பயிருக்கு ஏற்றாற் போல், வேருக்குச் சற்று தள்ளி தண்ணீர் பாய்ச்சுவது நல்லது. அப்பொழுதுதான், நுண்ணுயிர்களால் உருவாக்கப்பட்ட நுண்சத்துகள் தண்ணீரில் கலந்து பக்க வேர்களுக்குள் போகும், காற்றோட்டத்திலும் கலக்கும். நுண்ணுயிர்களின் இயக்கத்தால் ஏற்படும் சக்திமிக்க காற்றோட்டத்தால், தாவரங்கள் வளமாகச் சுவாசிக்கும்.
பூச்சிக் கொல்லிகள்: 
மண், விதை, பயிர் ஆகியவற்றை வளப்படுத்தினாலும், பூச்சிகள், புழுக்கள், வண்டுகள் ஆகியன பயிர்களைத் தாக்க வருவது இயல்பே. விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படாமல் தடுக்க, அவற்றை விரட்டவோ, கொல்லவோ வேண்டியது அவசியமாகின்றது.
 
 
5. காரக்கொல்லி:
பயிர் தாவரங்களின் இலைச்சுருட்டி மற்றும் தண்டு, பழம், கதிர் துளைப்பான் பூச்சிகளைக் கொல்ல, காரக்கொல்லியைப் பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்களின் விகிதம்:
1. நாட்டுப் பசுமாட்டுக் கோமியம் – 10 லிட்டர்.
2. புகையிலை – 1 கிலோ.
3. பூண்டு – 500 கிராம்.
4. பச்சை மிளகாய் – 500 கிராம்.
5. வேப்பிலை – 5 கிலோ. 
6. தண்ணீர் – 10 லிட்டர்.
 
செய்முறை:
அ) பூண்டு, பச்சை மிளகாயை நன்கு நசுக்கிக் கொள்ளவும்.
ஆ) வேப்பிலை, புகையிலை, நசுக்கிய பூண்டு, பச்சை மிளகாயை, கோமியம் ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீரில் நன்கு கலக்கிக் கொதிக்க வைக்கவும்.
 
பயன்படுத்தும் முறை:
200 லிட்டர் தண்ணீரில், 10 லிட்டர் காரக்கொல்லியைக் கலந்து, இலைச்சுருட்டி, துளைப்பான் மற்றும் எல்லா வகையான பூச்சிகளையும் விரட்டலாம்.
 
 
6. கசப்பு-துவர்ப்புக் கொல்லி:
பயிர் தாவரங்களின் சத்தை உறிஞ்சும் பூச்சிகளைக் கொல்ல, விரட்ட, கசப்பு-துவர்ப்புக் கொல்லியைப் பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்களின் விகிதம்:
1) நாட்டுப் பசுமாட்டுக் கோமியம் – 10 லிட்டர்.
2) வேப்பிலை – 3 கிலோ.
3) சீத்தா இலை – 2 கிலோ.
4) பப்பாளி இலை – 2 கிலோ.
5) மாதுளை இலை – 2 கிலோ
6) கொய்யா இலை – 2 கிலோ
7) உண்ணி இலை – 2 கிலோ
8) வெண் ஊமத்தை இலை – 2 கிலோ.
 
செய்முறை:
அ) எல்லா இலைகளையும் நன்றாக இடித்து நசுக்கிக் கொள்ளவும். 
ஆ) கோமியத்தில் இட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
இ) ஆற வைத்து, வடிகட்டி சேமித்து வைக்கவும்.
 
பயன்படுத்தும் முறை:
100 லிட்டர் தண்ணீரில், 2 லிட்டர் கரைசலைக் கலந்து தெளிக்கவும்.
 
 
7. வேப்பிலை விரட்டி:
சத்து உறிஞ்சான், வெண்மூட்டைப் பூச்சி / மாவுப்பூச்சி / சூரைப் பூச்சி போன்றவற்றை விரட்ட, வேப்பிலை விரட்டியைப் பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்களின் விகிதம்:
1) நாட்டுப் பசுமாட்டுக் கோமியம் – 5 லிட்டர்.
2) நாட்டுப் பசுமாட்டுச் சாணம் – 5 கிலோ.
3) தண்ணீர் – 100 லிட்டர்.
4) வேப்பிலை – 5 கிலோ
 
செய்முறை:
அ) வேப்பிலையை நன்கு இடித்துக் கொள்ளவும்.
ஆ) வேப்பிலைத் தொக்கு, சாணம், கோமியம் ஆகியவற்றைத் தண்ணீரில் கலந்து, கலக்கி, சாக்குப் பையால் மூடி, நிழலில் 48 மணி நேரம், புளிக்க வைக்கவும்.
இ) கரைசலை வடிகட்டி சேமித்து வைக்கவும். 6 மாதம் கெடாது.
 
பயன்படுத்தும் முறை:
நேரடியாகப் பயிர்களின்மீது பயன்படுத்தலாம்.
இவ்வாறு, இயற்கைக்கு உகந்த விதை, பயிர், மண் வளப்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொண்டு, தேவையைப் பொறுத்து, இயற்கைப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தினால், அதிகமான இலாபத்தோடு, ஆரோக்கியமான உணவுப் பண்டங்களை, நம் மக்களுக்கும் உலகுக்கும் அளிக்கலாம்.  
 
— சொல்லாக்கியன்  

News

Read Previous

திருக்குறளில் நகைச்சுவை!

Read Next

தெலுங்கு, மலையாள மொழிச் சொற்கள் வந்த வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *