ஒரு புட்டித் தண்ணீர்
ஒரு புட்டித் தண்ணீர்
ஒரு மாதத்திற்கும் மேலாகப் பார்க்கிறேன் மஸ்ஜிதின் நுழைவாயிலில் ஆடாமல் அசையாமல் ஒரு பாட்டில்; அதில் தண்ணீர்.
‘யாரோ வைத்துவிட்டு மறந்துவிட்டார்களோ, இந்த ஊரில் யார் இப்படியான பாட்டிலில் தண்ணீர் சுமக்கிறார்கள், ஒருவேளை ஜம்ஜம் தண்ணீரோ, இல்லையே இந்த முறை
வெளிநாட்டவருக்கும் ஹஜ் இல்லையே…’
இப்படியாக இதைப் பார்க்கும்போதெல்லாம் மூளைக்குள் ஏகப்பட்ட குரல்கள், கேள்விகள்.
இன்று வெளியேறும்போது கமிட்டி உறுப்பினர் ஒருவரைப் பார்த்து கேட்டே கேட்டு விட்டேன்.
“ஓ இதுவா?” என்று சிரித்த அவர், “சகோதரர் முஸ்தஃபா அதை வைத்தார். இந்த இடத்தில் நிறைய எறும்புகள். இப்படி நீரை வைத்தால் தமது பிரதிபலிப்பை பாட்டிலில் காணும் எறும்புகள் ஓடிவிடும் என்றார். நான்கூட நம்பவில்லை. எறும்புகள் ஓடிவிட்டன. பிறகு நகர்த்திவிட்டால் மீண்டும் வந்துவிட்டன. அதன் பிறகு இங்கு வைத்துவிட்டேன். அன்றிலிருந்து அவை மாயமாகிவிட்டன” என்றார்.
காலணிகள் விடும் அந்த இடத்தில் எறும்புப் படைகளைக் கண்டது எனக்கும் நினைவில் உள்ளது. அதைத் துரத்த இப்படியோர் எளிய உபாயம் இருப்பது அறிந்து எனக்கு ஆச்சரியம்.
எறும்பு தொல்லையிலிருந்து விடுபட விரும்புபவர்கள் இதை முயற்சி செய்துவிட்டு பலனிருந்தால் நன்றி பகரவும். அதை நான் சகோ. முஸ்தஃபாவிடம் தெரிவிப்பேன்.