விழுப்புரத்தின் நூற்றாண்டுக் கட்டடம்
விழுப்புரம் திரு.வி.க. வீதியில் (இதன் பழைய பெயர் கச்சேரி சாலை) ஐரோப்பிய கட்டடக் கலைப்பாணியுடன் கட்டப்பட்டக் கட்டடம்.
1907 ஆகஸ்ட் 3இல் சென்னை கல்வித்துறையைச் சேர்ந்த எச்.ஸ்டோன் என்பவரால் திறந்து வைக்கப்பட்டதாகச் சொல்கிறது இங்குள்ள அடிக்கல்.
விழுப்புரம் இரயில்வேயில் ஐரோப்பியர்கள் அதிகளவில் பணியாற்றிய நேரம். அவர்களது குழந்தைகளுக்கான பள்ளியாக இந்தக் கட்டடம் இயங்கியிருக்கலாம்!
ஆடிட்டோரியம் போன்ற அமைப்பு, அழகிய கூரை, தூண்கள் என நூற்றாண்டுக்கு முந்தைய இந்தக் கட்டடம் அழகாகக் காட்சியளிக்கின்றது.
1940, 50களில் இங்கு தென்னார்க்காடு மாவட்ட ஆசிரியர் பயிற்சி இயங்கியுள்ளது. என்னுடைய (தாய்வழி) தாத்தா வீரபத்திர படையாட்சி, என் தந்தை சி.கோதண்டம் ஆகியோர் இங்குதான் ஆசிரியர் பயிற்சி பெற்றனர்.
1978 முதல் அரசு மகளிர் மேனிலைப்பள்ளி இங்கு இயங்கி வருகிறது.
கடந்த 2007ஆம் ஆண்டு இதன் வயது நூறு. இதனை நினைவுபடுத்த வேண்டுமே!
இங்குப் பயிலும் மாணவிகளை வெளியே நிற்கச் சொல்லி கைதட்டி (கட்டடத்திற்கு உற்சாகம் ஊட்டுவதற்கு) மகிழ்ச்சியடையச் செய்தேன். நானும் மகிழ்ந்தேன்.
அடுத்த நாள் தினகரனில் செய்தியாகவும் பதிவு செய்தேன்.
கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் இந்தப் பாராம்பரியக் கட்டடம் புராதானச் சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய ஒன்று.
இதைவிட வயதான, சிறப்புவாய்ந்தக் கட்டடங்கள் உங்கள் ஊரில் இருக்கக்கூடும். இருக்கலாம்.
ஆனாலும் இந்த மண்ணில் இருக்கும் பழமை என்பதற்கானப் பதிவு இது.