விமர்சிக்கும் உலகம் இது!
விமர்சிக்கும் உலகம் இது!
பட்டினத்தார் எத்தனை பெரிய துறவி? கோடிக்கணக்கான சொத்தை அப்படியே விட்டுவிட்டுக் கோவணத்துடன் வெளியேறிய மிகப்பெருந்துறவி.
உணவின் மீதுகூட பற்றை வைக்காத மகா சந்யாசி. கையில் ஓடு வைத்திருந்த பத்திரிகிரியாரைத் சொத்து வைத்திருக்கும் குடும்பஸ்தன் என்று கிண்டலடித்த துறவி.
அத்தகைய துறவி பட்டினத்தடிகள் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு…
நடந்த களைப்பால் வயலில் படுத்திருந்தார் பட்டினத்தார். அறுவடை நடந்திருந்த நெல்வயல் அது. குச்சி குச்சியாய்ப் பூமியில் இருந்து கிளம்பி அறுபடாதிருந்த வைக்கோல் மேலாடை இல்லாத அவர் உடம்பில் குத்திக் கொண்டிருந்தது. ஆனாலும் அதைச் சட்டை செய்யாமல் படுத்துக் கிடந்தார். இருக்கும் போதே இறந்து போன மாதிரி இருந்தார்.
அந்த வழியாகப் போன இரண்டு பெண்கள் வரப்பு வழியாக நடந்து போக முடியாதபடி பட்டினத்தார் வரப்பு மீது தலைவைத்துப் படுத்திருந்தார்.
ஒரு பெண்மணி, “யாரோ..? மகானாம்!” என்று அவரை வணங்கி வரப்பிலிருந்து இறங்கி நடந்தாள்.
மற்றொரு பெண்மணியோ, “ஆமா..மா! இவரு பெரிய சாமியாராக்கும். வரப்பை தலைக்கு தலையணையா வைச்சுத் தூங்கறான் பாரு… இதகூட துறக்க முடியல… ஆசை பிடிச்சவன்!” என்று கடுஞ்சொல் வீசினாள்.
அவர்கள் கடந்து போனதும் எழுந்து உட்கார்ந்த பட்டினத்தார், “ஆஹா… நமக்கு இந்த அறிவு இது நாள் வரை இல்லையே” என்று வருந்தி வரப்பிலிருந்து தலையைக் கீழே வைத்துப் படுத்தார்.
சற்று நேரத்தில் அந்த இரண்டு பெண்களும் அதே வழியாகத் திரும்பி வந்தனர். வரப்பிலிருந்து தலையை இறக்கிக் கீழே வைத்திருந்த பட்டினத்தாரைப் பார்த்து முதல் பெண் பரிதாபப்பட்டு, “பார்த்தாயா… நீ சொன்னதைக் கேட்டு உடனே கீழே இறங்கிப் படுத்துட்டாரு… இப்பவாவது ஒத்துக்கோ… இவரு மகான்தானே…! என்றார்.
அந்த பெண்மணியோ, தனக்கே உரித்த பாணியில் “அடி போடி… இவனெல்லாம் ஒரு சாமியாரா? தன்னைப் பத்தி யார் யாரு என்ன என்ன பேசுறாங்கன்னு ஒட்டுக் கேட்கிறான். அதைப் பத்திக் கவலைப்படறான். நாலுபேரு நாலுவிதமா சொல்லுவாங்க.. அதுக்கெல்லாமா புத்திய சாயவிடறது. தனக்குன்னு அறிவு வேண்டாம்… இவனெல்லாம் ஒரு சாமியாரு… மகான்…?” என்று ஒரு வெட்டு வெட்டினாள்.
தன் துறவுப்பயணத்தில் சந்தித்த இது போன்ற பல நிகழ்வுகளே பட்டினத்தாருக்கு ஞானவாசலை திறந்துகோண்டே சென்றது. அதனால் தான் பெரும் செல்வந்தரான அவர் பெருந்துறவியாகவும் மகா சித்தராகவும் மாறிப்போனார்…
நீதி: எப்படி இருந்தாலும் உலகம் நம்மை விமர்சிக்கும். இது பேருண்மை. தரமானவர்களின் தரமான விமர்சனத்திற்கு மதிப்பளிப்போம்.
விமர்சிக்க வேண்டும் என்கிற வெறியுடன் விமர்சிக்கிறவர்களின் காழ்ப்புணர்ச்சி விமர்சனத்தைப் புறந்தள்ளிவிடுவோம்!
மனம் தடுமாறாது… சிந்தனை தெளிவாக இருக்கும்..!