ரப்பர் செருப்பு கண்டுபிடிப்பும் ஈமானிய பலவீனமும்!

Vinkmag ad

2011 ஜூன் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் பரபரப்பாக பத்திரிக்கைகளில் ஒரு இஸ்லாமிய சிறுவன் சென்னை சிந்தாதரிப்பேட்டைப் பகுதியில் காணாமல் போனது பற்றிய செய்தி வெளியானது. அதாவது தெருவோர சிக்கன் பக்கோடா விற்கும் ஹாரிப் பாஷாவின் பதினோரு வயது மகன், தனது பாட்டியின் பராமரிப்பில் வீட்டிலிருந்தவன், பாட்டி தனது மகன் கடைக்குச் சென்று வந்த ஐந்து நிமிடத்தில் காணாமல் போய் விட்டான். அந்தச் சிறுவனைக் காணாது பெற்றோரும், உற்றாரும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என அறிந்து காவல் நிலையத்தில் புகாரும் செய்யப்பட்டது. காவல் துறையினரும் வழக்கம் போல பல குழுக்கள் அமைத்து சிறுவனைத் தேடி வருவதாக செய்திகள் வந்தன.
இந்த இடைப்பட்ட காலத்தில் அந்தச் சிறுவனின் பெற்றேரும், உற்றாரும் ‘அறிவு சால்’ புதிய இன்டர் போல் போலீஸையும் தோர்க்கடிக்குமளவிற்கு ஒரு புதிய புலன் விசாரணையினை மோற்கொண்டதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டது. அது என்ன என்று கேட்பதிற்கு ஈமானுள்ள அனைவருக்கும் ஆவல் இருப்பது நியாயமே! அது தான், ‘ரப்பர் செருப்பு’ கண்டு பிடிப்பு. அதாவது ஒரு ரப்பர் செருப்பினை எடுத்து நடுவில் ஆனியால் ஓட்டைப் போடுவார்கள். பின்பு பெற்றோர் சந்தேகத்திடமான நபர்களின் பெயர்களை எழுதி துண்டு சீட்டுகளில் வைத்து அந்த செருப்பில் வைத்து சுற்றுவார்கள். எந்த நபரின் சீட்டு கீழே விழாமல் கடைசி வரை இருக்கிறதோ அவர் தான் சந்தேகத்திற்குள்ளான நபராக கருதி விசாரணை நடக்குமாம். அதே போல ரப்பர் செருப்பினை சுற்றி விட்டதில் கடைசியாக இருந்த சீட்டிற்கு சொந்தமானவர் அழுக்கு உடையுடன் அந்தப் பகுதியில் சுற்றிக் கொண்டு பிளேட்பாரத்தில் படுத்துக் கொள்ளும் வயதான பிச்சைக்காரர் பெயர் இருந்ததாம். எவ்வளவு விஞ்ஞானப் பூர்வமான கண்டு பிடிப்பு? இதன் மூலம் ‘பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் போய் விடாதா’ சகோதர, சகோதரிகளே?
இதே போன்ற பல விதமான அஞ்ஞான வழி முறைகளில் குற்றங்களை கண்டு பிடிக்கும் முறைகள் சிலவற்றை நான் சிறுவனாக இருந்த போது அறிவேன். அதாவது ஒரு ஊரில் குற்றம் நடந்தால் அதனை கண்டு பிடிக்க மூன்று கால்கள் உள்ள வெங்கல மண்னெண்ணை ஸ்டவ்வினை இருவர் பிடித்துக் கொள்ள ஒரு காலில் அந்த ஸ்டவ் கோல மாவுமேல் நகரும். அது எந்த வீட்டின் முன்பு நிற்கிறதோ அவர் மேல் சந்தேப் பார்வை திரும்பும். அதன் இரு கால்களையும் பிடித்துக் கொள்பவர் முதுகு வலியாலும், கைகள் வலியாலும் எங்கு நிறுத்துகிறார்களோ, அங்கு தான் சந்தேப்பார்வை விழும்.
அய்யாமே ஜாஹிலியா என்ற அரேபிய நாட்டின் இருண்ட காலத்தில் மழை இல்லையென்றால் மாட்டின் வாலுக்கு தீ வைத்தால் மழை பொழியம் என்ற மூட நம்பிக்கையும் இருந்ததாம். இப்போது அது போல நடந்தால் பிராணி வதைச் சட்டத்தில் அவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டுமல்லாவா?
அனால் விஞ்ஞான முறையில் தனது தந்தைக்கு நடந்த கோர விபத்தினை  மதுரை மேலூரினைச் சார்ந்த ஒரு இளைஞர் கண்டு பிடித்திருக்கிறார் என்ற செய்தி ஊடகங்களில் வந்ததை சுருக்கமாக இந்த இடத்தில் சொல்லவது பொருத்தமாக இருக்கும். மதுரை-திருச்சி ரோட்டில் மேலூருக்கு அருகில் உள்ள கிராமம் தும்பைப்பட்டியாகும். அந்த கிராமத்தில் மீரா லெப்பை என்ற முதியவர் ரோட்டினை கடக்கும்போது 2011 ஏப்ரல் மாதம் 17ஆம்தேதி வாகன விபத்தில் சிக்கினார். படுகாயம் ஏற்படுத்திய வண்டி மறைந்து விட்டது மனிதாபமில்லாமல்.   மீரா லெப்பை இறைவனடி சேர்ந்து விட்டார். ஆனால் அவருடைய மகன் ராஜா முகம்மது தன் தந்தையின் மீது மோதிவிட்டு மறைந்த டாடா இன்டிகா வண்டியினைத் தேடி திருச்சி ஹைவேயில் உள்ள இரண்டு டோல்கேட்டுகள் ரிக்கார்டுகளை ஆராய்ந்து, அதன் பின்பு விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரின் ஓட்டுனரை கண்டு பிடித்து போலீஸிடம் ஒப்படைத்துள்ளார். இது எதனைக் காட்டுகிறது என்றால் நமது ஞானத்தினை பயன்படுத்தினால் அஞ்ஞானம் மறைந்து விடுமல்லவா?
அது போன்ற விஞ்ஞான அறிவினை பயன் படுத்தாதால் இன்று மேலை நாட்டவர் அரேபிய- ஆப்பிரிக்க முஸ்லிம் நாடுகளின் தலையில் குட்ட குட்ட அடி வாங்கி வேதனைப் படும் நிலையில் இருக்கிறார்கள் என்றால் சரிதானே!
பாகிஸ்தான் அபட்டாபாத் நகரில் தஞ்சம் புகுந்திருந்த ஒசாமா பின் லாடன் இருக்கும் இடத்தினை எப்படி அமெரிக்கர்கள் கண்டு பிடித்தார்கள் என்ற செய்தி சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒசாமா சந்தேப்படும் வீட்டில் தான் இருக்கிறாரா என்று தீர்மானிக்க  ஒரு யுக்தியினை கையாண்டிருக்கிறார்கள். அபாட்டாபாத் நகரில் உள்ள ஒரு டாக்டரிடம் அந்த பகுதியல் உள்ள மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தும் படி ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள். எதற்கென்று அவருக்கு தெரியாதாம். ஆனால் அமெரிக்க உளவுப்படை  ஒசாமா தங்கியுள்ள வீட்டில் இருப்பவர்களின் ரத்தத்தினை எடுத்து டி.என்.ஏ என்ற ரத்தப்பரிசோதனை நடத்தி, அங்குள்ளவர்கள் ஒசாமாவுடன் ரத்த சம்பந்தமான தொடர்புள்ளவர்கள்தான் என்று அறிந்ததின் மூலம் ஒசாமா அங்க தான் இருக்கிறார் என்ற உறுதி செய்து, பின்பு தான்; நடவடிக்கை எடுக்க திட்டமிட்டார்களாம்.
இறைவன் களிமண்ணைத் தான் படைப்பான். ஆனால் மண்பாண்டம் செய்யும் குயவன்தான் அதனை பல் வேறு பாத்திரங்களாக உருவாக்க வேண்டும். அது போன்றுதான் நம்மை மனிதனாக படைத்த வல்ல நாயனுக்கு நன்றி தெரிவித்து தனது அறிவினை பட்டை தீட்டி தனது அறிவுப் பூர்வமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். ஆறறிவினைப் பெற்ற நாம் நமது தேவைகளுக்கு ஜோசியம் பார்ப்பதும், இறந்த மனிதர்களிள் தர்காக்களுக்கு சென்று வேண்டுவதும், மாற்று மத சாமியார்களிடம் தஞ்ஞம் புகுந்து ஈமானை இழப்பதும், மாற்று மத வழிபாட்டு தளங்களுக்குச் சென்று வழிபடுவதும் சரியா? அது ஈமானை இழந்த செயலாக கருதவேண்டாமா?
2011 ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஆந்திர மாநிலம் காளகஸ்தியில் ஒரு கார்-லாரி விபத்தில் சென்னை திருவான்மியூரைச சார்ந்த ஐந்து கனினி பொறியாளர்கள் இறந்து விட்டனர் என்ற பத்திரிக்கை செய்தியினை பார்த்து பரிதாபப்பட்டு படிக்க ஆரம்பித்தபோது எனக்கு மிகவும் அதிர்ச்சியான செய்தி ஒன்று என் கண்ணுக்குத் தெரிந்தது. அதாவது ஐந்து பொறியாளர்களில் மூவர் முஸ்லிம் அல்லாதவர்; இருவர் முஸ்லிம்கள். அவர்கள் ஐந்து பேர்களும் திருப்பதி வெங்கடேஸ்வர கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு விட்டு அதன் பின்பு காளஹஸ்தியிலுள்ள கோவலில் சாமி கும்பிட வரும் போது விபத்து நடந்ததாக கூறப்பட்டுள்ளது. முஸ்லிம் அல்லாத அந்த பொறியாளர்களுடன் சாமி கும்பிடச் சென்ற இரண்டு முஸ்லிம் பொறியாளர்களை எப்படிச் சொல்வது. அவருக்கு திருப்பதி வெங்கடேஸ்வரர் கொடுத்த அருள் மற்றும் கருணை என்று சொலவதா அல்லது ஏக இறை அல்லாஹ்வின் தண்டனை என்று சொல்வதா என்பதினை உங்கள் சிந்தளைக்கே விட்டுகிறேன்.
ஆகவேதான் அகிலத்தினை படைத்து அற்புதங்களை நிகழ்த்தி மனிதனுக்கு ஆறறிவினை அளித்த அல்லாஹ்விற்கு மாறு செய்யாமல், நான் மேற்குறிப்பிட்ட அஞ்ஞான நடவடிக்கைகளை அறவே ஒழிப்போம் என புனித ரமளான் மாத்தில் அனைவரும் உறுதி எடுத்து கொள்வோமா சகோதர சகோதரிகளே!
ஆக்கம் : டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ் (ஓ)

News

Read Previous

மரணம் ஒரு பயணம்

Read Next

இறை மன்னிப்பு நிறைந்த இனிய ரமளான்

Leave a Reply

Your email address will not be published.