மீண்டும் ஒரு நாகசாஹி ,ஹிரோஷிமா

Vinkmag ad

( குடந்தை ஹுசைன் )

 
பத்து  பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியிலிருந்து பேருந்தில் வந்துக்கொண்டிருந்தேன் .60 வயது மதிக்கத்தக்க ஒரு முகமதியரும்
10 வயது உடைய ஒரு சிறுவனும் BHEL பேருந்து நிறுத்த இடத்தில ஏறினர் .முதியவர் தலையில் தொப்பி , முகத்தில் ஒழுங்கு படுத்தப்பட்ட
வெண் தாடி ,கட்டம் போட்ட கைலி,வெள்ளை சட்டை அணிந்திருந்தார் .பையனைப் பார்த்தமாத்திரத்திலேயே அவரது பேரன் என்று தெரிந்துவிட்டது .பால் வடியும் வதனம் . வெண்ணிறம் .அளவெடுத்த நாசி .கொவ்வை செவ்வாய் .படிய வாரிய தலை . முழு கால் சராய் .
இதுதான் பையனின் திருமேனி .
என் இருக்கைக்கு அருகே இடமிருந்ததால் இருவரும் என் அருகே அமர்ந்தனர் .சிறுவன் அல்லது ஒல்லியான ஆள் பஸ்ஸில் ஏறினால்
நான் அவர்களுக்கு முன்னுரிமை தந்து , என் அருகில் அமரசெய்வது வழக்கம் .காரணம் எனக்கு இடம் விஸ்தாரமாக கிடைக்கும் அல்லவா ?.முதியவரது முகத்தில் கவலை ரேகைகள் ஓடி ஒளிந்துக்கொண்டிருந்தன .அவரிடம் பையன் ஏதோ சைகையில் கேட்டான் .
சைகையில் அவரும் பதில் கூறினார் . கண்டக்டரிடம் “இரண்டு கும்பகோணம் ‘ என்று சொன்னபோதுதான்  அவர் ஊமை இல்லை எனபது
தெரிந்தது .மெல்ல அவரிடம் பேச்சு கொடுத்தேன் .
“தம்பி ! இவன் என் மக வயத்து பேரன் .சின்ன வயசுலே அவளை கட்டிக்கொடுதுட்டேன் .அவ புருஷன் இப்ப சிங்கபூருளே இருக்கான் . ”
என்றார் . “ஒங்க மகளோ மருமகனோ ஊமையா ?” என்றேன் .நீண்ட பெருமூசுக்குப்பின்  அந்த முதியவர் கூறினார் “அதெல்லாம் இல்லே
தம்பி .இரண்டுபேரும் நல்லாத்தான் இருக்காங்க .இந்த பய அப்பனோட தாத்தா வம்சத்திலே  ஒருத்தர் ரெண்டாவது உலக மகா யுத்தத்திலே
ஜப்பான்லே குண்டு போட்ட ஹிரோஷிமாவிலே இருந்திருக்கிறாரு .அவரே அணுகுண்டு கதிர் வீச்சு பாதிச்சு இருக்கு .அவரோட வம்சா வழியிலே யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லே .ஆனா என் தலை விதி அல்லா சொதிச்சிட்டான்.என் மருமகனுக்கு அந்த கதிர் வீச்சு  பாதிப்பு வம்ச வியாதியா வந்திருக்கு .இது யாருக்கும் தெரியலே .இந்த பய பொறந்து பேச்சு மூச்சு இல்லாமே பேத்த பேத்த முழிச்சான் .
பெரும் செலவு செய்து வைத்தியம் பார்த்தோம் .மொதல்லே மூளை பாதிச்சதுன்னு சொன்னாங்க .வைத்தியத்திலே அது சரியா போச்சு .
பின்னாடி பேச்சு வரலே .காது கேக்கலே. அப்புறம்தான் கதிர்வீச்சு பாதிப்புன்னு கண்டு புடிச்சாங்க .BHEL லே  இதுக்கு ஒரு ஸ்கூல்
இருக்குன்னு தெரிஞ்சு சேர்த்தோம் .இங்கேதான் தங்கி படிக்கிறான் ” என்றார் .
அணுகுண்டு கதிர் வீச்சு எத்தனை தலைமுறை தாண்டி ஜப்பானை காணாத ,,அணுகுண்டு பற்றித் தெரியாத இந்த அப்பாவி சிறுவனை பாதித்துப்பதைக் கண்டு வேதனையுற்றேன் .ஒரு விதத்தில் எனக்கு ஆறுதல் .இந்த சிறுவனை அப்படியே விட்டுவிடாமல் , விடா முயற்சியாக இந்தப் பெரியவர் செய்த தொண்டு அறிய தொண்டு .
 
தற்போது நிகழும் இந்த அணு உலை வெடிப்பு கதிர்வீச்சை தொலைகாட்சியில் காணும்போது அந்த ஏதும் அறியா அப்பாவிச் சிறுவனின்
வதனமே என் கண் முன் விரிகிறது .
 
இயற்கையை மனிதன்  வெல்வது இயற்கையே !.ஆனால் அந்த இயற்கையை மனிதன் அளவுக்குமீறி அமைதியாய் புற்றில் உறங்கும்
பாம்பை சீண்டும்போது  சீரிப்பாயிந்து  கொத்துவது போல்  பூகம்பம் ,சுனாமி ,எரிமலை என்று இயற்கை சீற்றம் கொண்டு  சீறி அழிக்கிறது
 
இயற்கை சீற்றத்தின் அழிவு  பிரபஞ்ச அழிவில்தான் முடியுமோ ?

kudanthaihussain.hussain@gmail.com

News

Read Previous

தளிர்க்கும் தளிரை…

Read Next

ஜப்பான் பாபப் பலிகடாவா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *