மருந்தெல்லாம் மருந்தல்ல…!

Vinkmag ad

மருந்தெல்லாம் மருந்தல்ல…!

மருந்து வாங்கப் போறீங்களா?

[இதனை எழுதிய திரு. இ.க. இளம்பாரதி, முதுநிலை மருந்தியலை, மருந்துண்ணறிவியல் துறையில் பயின்றுள்ளார் (Master of pharmacy in pharmacology). இப்பொழுது பெங்களூரில் ஒரு தனியார் மருந்து நிறுவனத்தில் மனித வழி ஆராய்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறார். இன்றைய காலகட்டத்தில் மருந்துகளின் நதிமூலம், மருந்துகளில் கலப்படம், போலிகள் உருவானது, உலகில் பல இடங்களிலும் நடந்த துயர்படுத்தும் பக்க விளைவுகள், பல்வேறு ஆய்வுகள், மருந்துகளின் எதிர் மறை விளைவுகள், உலகில் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் எப்படி உலவுகின்றன என்று பல விஷயங்களையும் ஆழமாக ஆய்ந்து இங்கு வெளியிடுகிறோம்.]

மருந்து. இந்தச் சொல்லைப் பலர் தமது வாழக்கையில் கேட்டிருக்கலாம். அவ்வப்போது பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட வயதைக் கடந்தவுடன், பலருக்கு மருந்துதான் வாழ்க்கையே.

நிலம், நீர், நெருப்பு, காற்று, மற்றும் ஆகாயம் என்ற இந்த ஐம்பூதங்கள்தான் மனிதன் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதவை. சில வேளைகளில், இந்த ஐம்பூதங்கள் இருந்தும் பலரால் உயிர் வாழ முடியாது. அந்த நேரத்தில் அனைவரும் சரணடையும் ஒரே இடம் இந்த மருந்து. உடல் நலமில்லாத போது தனது பழைய வலிமையை மீட்டுக் கொடுக்கும் போதும், மருந்தின் முக்கியத்துவத்தை மனிதன் தெளிவாக அறிவான்.

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில்தான் ஆங்கில மருந்துவத்தின் வளர்ச்சி விசுவரூபம் எடுத்தது. இதற்கு இரண்டாம் உலகப்போர் ஓர் முக்கிய காரணமாக இருந்தது. ஒரு குறுகிய‌ காலகட்டத்துக்குள், மருத்துவ உலகின் முடிசூடா மன்னனாக ஆங்கில மருத்துவம் உருவெடுத்தது.

ஆங்கில மருத்துவத்தின் இந்த அசுர வளர்ச்சிக்கு காரணம், உடனடியாக கிடைக்கும் தற்காலிக நிவாரணம் தான். ஒரு பொத்தான் அளவுள்ள மாத்திரை அல்லது சில நீர்த்துளிகளாகக் கண்ணாடிக் குப்பியில் அடைக்கப்ப‌ட்ட மருந்து, உடலின் உள்ளே சென்றவுடன் சில மணித்துளிகளிலேயே அந்த நோயில் இருந்து தற்காலிக நிவாரணம் கிடைகிறது.

சரி, இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆங்கில மருத்துவத்தில் என்ன பிரச்சனை?

அதன் சிறப்புகள்தான் பிரச்சனையே. ஒரு பொத்தான் அளவுள்ள மருந்து, நோயில் இருந்து தற்காலிக நிவாரணத்தை தருகிறது என்றால், அந்த மருந்து எவ்வளவு வீரியமிக்க வேதிப் பொருள்களால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடும். ஒரு நோயைக் குணப்படுத்துவதற்காக, நாம் சாப்பிடும் இந்த வேதிப்பொருள்கள் நோயை மட்டும் குணப்படுத்தினால் மகிழ்ச்சி. ஆனால், கூடவே பல உறுப்புகளின் வேலைகளிலும் சென்று மூக்கை நுழைப்பதுதான் பிரச்சனையே.

ஃபினைல் புரோபனோலமைன் (Phenyl Propanolamine) மூக்க‌டைப்பு மற்றும் சளியைக் கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படும் மருந்தாக நமது நாட்டில் வலம் வந்து கொண்டிருந்தது. இதே மருந்து, அமெரிக்கா உள்பட பல நாடுகளில் பசியைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. அதாவது, சளி மற்றும் மூக்கடைப்புக்காக நாம் சாப்பிடும் மருந்து. சளி மற்றும் மூக்கடைப்பைச் சரி செய்வதுடன் நின்றுவிடாமல், தேவையில்லாமல் நமது பசியையும் குறைக்கிறது.

இது ஒரு சிறு உதாரணம்தான். இன்னும் தெளிவாகச் சொல்வது என்றால், நீங்கள் கால் சுண்டுவிரலின் வலிக்காக‌ச் சாப்பிடும் மருந்து, உடலில் ரத்தத்தில் கலந்து கால் சுண்டு விரலின் வலியைக் குறைப்தோடு மட்டுமில்லாமல், அந்த மருந்துக்கான ரிசெப்டார்கள் (Receptors) (ரிசெப்டார்கள் என்பவை புரதத்தினால் ஆன மூலக்கூறுகள், இந்த ரிசெப்டாரில் சென்று பொருந்தித்தான் உடல் உறுப்புகளின் வேலையை மாற்றியமைக்கும்) உடலில் எங்கெல்லாம் இருக்கின்றவோ, அங்கே சென்று அதில் அமர்ந்து வேறு வேலைகளிலும் ஈடுபடுகிறது.

ரிசெப்டார்கள், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், இதயம் மற்றும் மூளை உள்பட மற்ற உறுப்புக்களிலும் குறைந்த அளவிலோ அல்லது அதிக அளவிலோ இருக்கின்றன. இதனால், எந்த ஒரு மருந்தும் நோயைத் தீர்ப்பதோடு நின்று விடாமல், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், இதயம் மற்றும் மூளை உள்பட பல முக்கிய உறுப்புகளின் வேலைகளிலும் தலையிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

நான் காய்ச்சலுக்காக மருந்து சாப்பிடுறேன். எனது சிறு நீரகம், மூளை, இதயம் என அனைத்துமே சீராகத்தானே இயங்குகின்றன. எந்த ஒரு மாற்றத்தையும் உணரவில்லை என்று நீங்கள் சொல்லலாம். இதற்கான‌ விளக்கம் என்னவென்றால், நீங்கள் காய்ச்சலுக்காகச் சாப்பிடும் மருந்தின் மூலக்கூறு, அதன் வேதியியல் அமைப்பு (Chemical Structure) உடலில் உள்ள எந்தெந்த ரிசெப்டார்களில் பொருந்தக் கூடியதாக இருக்கிறதோ, அவை அனைத்திலும் பொருந்தும். அந்தப் பொருந்தக்கூடிய ரிசெப்டார்கள், உங்கள் சிறுநீரகத்தில் இருந்தால், கண்டிப்பாக அதன் வேலைகளில் மாற்றங்கள் நிகழ்த்தும்.

இதில் குறிப்பிடும்படியான செய்தி என்னவென்றால், அனைத்து விதமான மருந்துகளும் செயலாற்றக்கூடிய பல வகையான ரிசெப்டார்கள், உடல் முழுவதும் பரவியிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட மருந்தை நாம் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளும்போதுதான், இந்தப் பிரச்சனை விசுவரூபம் எடுக்கிறது. ஏனென்றால், காலப்போக்கில் நோய் குணமாவதோடு, அந்த மருந்து பொருந்தக்கூடிய ரிசெப்டார்கள் அதிகம் உள்ள மற்ற உறுப்புகளும் பழுதடைந்து அல்லது செலிழந்துவிடுகின்றன. எனவே, உறுப்புக்களில் பிரச்சனை அல்லது செயலிழப்பு என்று வரும்போதுதான் உங்களால் உணரமுடியும்.

இது போன்று தனது வேலையைச் செய்வதோடு நின்றுவிடாமல், மற்ற உறுப்புகளின் வேலைகளிலும் அதிகமாகத் தலையிட்டு இறுதியில் உயிருக்கே ஆபத்தை விளைவிப்பதாகக் கருதக்கூடிய மருந்துகள்தான், அவ்வப்போது உலகில் பல நாடுகளில் தடை செய்யப்படுகின்றன. ஆனால், நம்மில் பலர் படிக்காமலேயே பாதி மருத்துவராக ஆகிவிட்ட நமது நாட்டில், இது போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய மருந்துகள் தடை செய்யப்படாமல் இருப்பதுதான் வருத்தம் அளிக்கக்கூடிய செய்தி. இது போன்ற காரணங்களால் தான் அவ்வப்போது, மருந்தினால் ஏற்படும் பல உயிர் இழப்புகள் எச்சரிக்கை மணியாக ஒலித்துக் கொண்டு இருக்கின்றன.

பல நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் என்று தெரிந்தும் இந்தியாவில் தடை செய்யப்படாத காரணத்தால் மக்கள் நலன் விரும்பும் பல மருத்துவர்கள் கூட அம்மருந்துகளை மக்களுக்குப் பரிந்துரைக்கும் நிலைக்குக் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கக் கூடிய விசயமாகும். மருத்துவத்துறையைச் சார்ந்தவர்களான மருந்தாளுநர்கள் மற்றும் செவிலியர்களில் பலருக்கும், இதுபோல் தடைசெய்யபட்ட மருந்துகளைப் பற்றித் தெரியவில்லை என்பது வேதனை அளிக்கக்கூடியது. இவர்களின் நிலையே இப்படி என்றால், மற்ற துறைகளைச் சார்ந்தவர்கள் மற்றும் சராசரிப் பமரனின் நிலை என்ன?

மற்ற துறைகளைச் சார்ந்தவர்களும் மற்றும் சராசரிப் பாமரனும் மருந்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா என்றால், ஆம் என்பதுதான் பதில். மருந்தைப் பற்றி முழுவதும் தெரிந்து வைத்திருக்க வேண்டியதில்லை. ஆனால் மருந்து பற்றிய விழப்புணர்வு (அடிப்ப‌டைத் தகவல்கள்) அனைவருக்கும் வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். உயிரைக் காப்பாற்றுகின்ற மருந்து, அந்த உயிரையே பறிக்கும் போது தேவைதானே!

மருந்து பற்றிய விழப்புணர்வு அவ்வளவு முக்கியமா?

நாம் வெளியே உடுத்தும் ஆடை, அணிகலன், முகப்பூச்சு போன்றவற்றுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில், ஒரு சதவீதமாவது உடலுக்கு உள்ளே எடுத்துக்கொள்ளும் மருந்து மற்றும் உணவுக்குக் கொடுத்திருப்போமா? காலில் அசுத்தம் ஒட்டிவிடாமல் இருக்கவே, நான்கு கடைகளில் ஏறி இறங்கி காலணி வாங்கும் நாம், மருந்தே அசுத்தமாக மாறி நிலை பற்றித் தெரிந்துவைத்திருக்கிறோமா, என்ன? அவ்வளவு ஏன், உடலை விட்டு வெளியேறும் கழிவை வாங்கும், கழிவறை உபகரணத்தையே தரமானதா என்று பார்த்து வாங்கும் நாம், உடலுக்கு உள்ளே செல்லும் மருந்தைப் பற்றித் தெரிந்துவைத்திருப்பதில் தவறில்லை.

நமது உதிரத்தை வெப்பப்படுத்தும் செய்தி, நிறுவனங்கள், இந்தியாவில் மருந்தை விற்பனை செய்யும் போது, இந்த மருந்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் (USFDA) அனுமதி பெற்றது என்று கூவிக் கூவி நமது மருத்துவர்களிடம் சொல்லி விற்கும் பல மருந்து நிறுவனங்கள், அதே அமெரிக்க மற்றும் மருந்து நிர்வாகத்துறையினரால் தடை செய்யப்பட்ட பல மருந்துகளை, இந்தியாவில் சத்தம் இல்லாமல் விற்றுத் தள்ளுகின்றன.

இந்தியா என்ன உங்களுக்கு தேவையற்ற மருந்தைக் கொட்டும் குப்பை தொட்டியா? என்றல்லவா கேட்கத் தோன்றுகிறது.

எனவே நம் உடலில் பாதிப்புகள் ஏதேனும் வந்தாலும் நம்பகமான, தரமான ஆயுர்வேதம், சித்த மருத்துவம், நாட்டு மருத்துவம், அக்குபங்க்சர், இயற்கை மருத்துவம், யுனானி போன்ற பாரம்பரியமான மருத்துவ முறைகளில் சிகிச்சை பெறலாம் (கவனம்: இதிலும் போலிகள் உண்டு. நல்ல மருத்துவரை விசாரித்து தேடி கண்டுபிடியுங்கள்). பொதுவாக, மாற்று மருத்துவம் உடலின் சமநிலையை மீட்டெடுக்கவே சிகிச்சை அளிக்கிறது. இதனால் உடல் தன்னைத் தானே சீர்படுத்திக் கொள்கிறது. மேலும், உடலை முழுமையான முறையில் அணுகுவதால், நோயாளியின் உடல் மற்றும் மனநிலையில் நேர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மாற்று மருத்துவமுறைகள் நோயாளியின் உடலுடன் ஒத்திசைந்து வேலை செய்கின்றன. மருத்துவர் நோயாளியுடன் அதிக நேரம் செலவிடுகின்றார். அவரது வாழ்க்கை முறையில் கவனம் செலுத்துகின்றார். இது நோயாளியை ரிலாக்ஸாக உணரவைத்து, குணமாக்குதலை துரிதப்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக செலவும் குறைவு. அலோபதி மருத்துவத்தால் கைவிடப்பட்ட பலரை மாற்று மருத்துவமுறை காப்பாற்றியுள்ளது.

அவசர மருத்துவ உதவிக்கு ஆங்கில மருத்துவம் தானே கைகொடுக்கிறது என்று கூறுவது மாற்று மருத்துவத்தைப் பற்றியோ, உடலின் இயல்பைப் பற்றியோ தெரியாதவர்களின் கூற்று. “எமெர்ஜென்ஸி சூழல்களையும் மாற்று மருத்துவர்களால் எளிதாகச் சமாளிக்க முடியும். அதற்குத் தேவை உடலைப் பற்றிய அடிப்படைப் புரிதல். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நல்ல மருத்துவரைக் கண்டறிவதுதான். ஏனென்றால், போலிகள் எல்லா இடத்திலும் இருக்கின்றனர். எது எதற்காகவோ மெனக்கெடும் நாம், நமக்கான நல்ல மருத்துவரைக் கண்டறியவும் சிரத்தை எடுக்கலாமே”.

இன்று நாம் கவலைப்படும் கடைசி விஷயமாக உடல்நலன் இருக்கிறது. ஆனால், மனித இனத்திற்கு அதுதான் அடிப்படை. நாம் உடலைக் கவனிப்பதில்லை. இயற்கையான அதன் உயிர் ஆற்றலை அறிந்து கொள்ளாமல், அதை இயந்திரத்தைப் போல அலட்சியமாகக் கையாள்கிறோம். முழுவதுமாக வெட்டெறியப்பட்ட ஒரு மரம், அதன் வேரில் இருந்து துளிர்த்து வருவதில்லையா? அதுபோலத்தான் மனித உடலும். உடலுக்கு எதிரான பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண் டாலே அது சிறப்பாக இயங்கும். மருந்து வர்த்தகச் சூழ்ச்சிக்கு நாமும் ஒரு எலியாக பலிகடாவாக ஆகாமல் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

News

Read Previous

தமிழ் பெண்கள் சங்கம்

Read Next

அத்திவரதர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *