மனதில் உறுதி வேண்டும்
இன்றைய சிந்தனை ( 26.07.20 )
………………………………………………
”மனதில் உறுதி வேண்டும்”
…………………………………………….
உடல்வலிமை பெற வேண்டுமானால் மனம் வலிமையுடன் இருக்கவேண்டும். மன உறுதி உடையவர்கள் நினைத்ததை எண்ணியவாறு அடையமுடியும்…
மன அமைதியைப் பொறுத்தே உங்கள் செயல் உறுதியடைகிறது. மன உறுதி உடையவர்கள் துன்பத்தில் துவண்டு விடுவதில்லை…
மனதில் உறுதி இருந்தால் மலைகளைக்கூட காலில் விழுந்து மண்டியிட வைத்துவிடலாம். மன உறுதி இல்லாதவர் கூழாங் கற்களுக்கே கூட குனிந்து வணக்கம் சொல்ல வேண்டியிருக்கும்…
மன உறுதி படைத்தவர் எதிர்ப்பு, ஏளனம், இடையூறுகளை எதிர்த்து முன்னேறிச் செல்கின்றனர்…
குப்பைக் கழிவுகளை உரமாக்கிக் கொண்டு மலரவில்லையா குண்டு மல்லிகள்…? காய்க்கவில்லையா கொய்யாக் கனிகள்…?
வரும் சோதனைகளை உரமாக்கிக்கொண்டு வாழ்கிறவன் வாசலில்தான் நாளும் மாலைகள் அவன் கழுத்திற்காக காத்து கிடக்கும்..
மன உறுதி உடையவர்கள் துன்பத்தில் துவண்டு விடுவதில்லை. மன உறுதி உடையவர்களால்தான் பிறர்க்கு உதவவும் முடிகிறது…
இந்தக் கருத்துக்களை உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். இதுவரை பெற்ற வெற்றிகளுக்கு உங்கள் மன உறுதியே காரணம். இது வரை ஏற்பட்ட சிக்கல்களுக்கு உங்களிடத்தில்
மன உறுதி இல்லாமையே காரணம் என்பதனை அறிவீர்கள்…
மன உறுதி தளர்ந்தால் – எவ்வளவு திறமை இருந்தாலும்
எவ்வளவு ஆற்றல் இருந்தாலும் அது பயனற்றதாகிவிடும். எல்லோரையும் அயிர்ப்புக் கண்கொண்டு பார்க்க நேரிடும். எடுத்ததெல்லாம் தோல்வியில் முடியும்… (அயிர்ப்பு- சந்தேகம்)
மன உறுதி தளர்ந்த மனிதன் குனிந்தே நடப்பான்; வழியை விட்டு ஒதுங்கியே நடப்பான். ஒதுங்கி நடக்க நடக்க, உலகம் உங்களை ஒதுக்கி வைத்துவிடும்…
ஆம் நண்பர்களே…!
ஒரு கருத்தினைப் புரிந்துகொள்ள வேண்டும். வெப்பத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மை இல்லாவிட்டால் மத்தாப்புகளால் சுடர் விட்டு ஒளிர்ந்திட இயலாது…
எனவே!, எந்த செயலானாலும் சரி, மன உறுதியுடன் அதில் முனைப்புடன் செயல்படுவோம். வெற்றிக்கனி நம் கைகளில் விழும். தோல்விகள் நம் கால்களில் விழும்…!
ஆம்.. எப்பொழுதும் மன உறுதியை ஒருக்காலும் தளர விடக்கூடாது…!
– உடுமலை சு. தண்டபாணி