பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்: ஏப்.13-1930
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும்.
இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார்- விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார்.
இவர் தந்தையும் கவிபாடும் திறன் பெற்றவர்.
கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உண்டு.
பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.
இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள்.
1959-ஆம் ஆண்டு இவர்களுக்கு குமரவேல் என்ற குழந்தை பிறந்தது.
அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.
பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர்.
இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை.
பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர்.
இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர்.
திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார்.
இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது.
1955ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.