”நிதானத்தை இழக்காதீர்கள்…!
இன்றைய சிந்தனை ( 16.09.20 )
…………………………………………………..
”நிதானத்தை இழக்காதீர்கள்…!
…………………………………………………..
மனிதன் நிறைகளோடு இருந்தாலும், குறைகளை மட்டுமே மிகப் பெரிய பொருள் நிறைந்ததாகக் காண்கிறான். அவற்றுள் ஒன்று நிதானத்தை இழப்பது…
நிதானத்தை இழப்பதினால் வாழ்க்கையில் பலவற்றை இழக்க வேண்டியிருக்கும். கோபத்தில் மனிதன் அறிவை இழந்துவிடுகிறான். அன்பை இழந்து விடுகிறான். பொறுமையை இழந்து விடுகிறான். பிறகு!, அவன் மனிதன் என்னும் தகுதியையும் இழந்து விடுகிறான்…
மனிதன் ஒவ்வொரு நிமிடமும் நிதானம் தவறாமல், தடுமாற்றமின்றி உறுதியுடன் இருக்க வேண்டும். வேகத்தினாலும் தடுமாற்றத்தினாலும் எதையும் கற்றுக் கொள்ள முடியாது…
எதையும் ஆர்வத்துடனும், உறுதியுடனும் நோக்கினால்தான் வெற்றி இலக்கினை எட்ட முடியும். அதனால்தான் பதறிய காரியம் சிதறும் என்று சொல்கிறார்கள்…
தானங்களில் எத்தனையோ தானங்கள் இருக்கிறது. அத்தனை தானங்களிலும் உயர்வாக இருப்பது நிதானம்தான்(கவனத்தை கையாளும் திறன்)…
எல்லா தானங்களுமே பிறரை வாழவைக்கும். ஆனால்…! நிதானம் மட்டுமே தன்னை வாழவைத்து, பிறரையும் வாழவைக்கும்…
மனிதனை மனிதனாய் அடையாளம் காட்டும். தன் காலம் வரை பிறரால் உயர்வாய் மதிக்கச் செய்யும். அந்த மகத்தான சக்தியே நிதானமும், பொறுமையுமே தரும்…
ஆம் நண்பர்களே…!
வாழ்க்கையின் எத்தகைய சூழலிலும் நிதானத்தை இழக்காமல் உறுதியோடு இருந்தால் வாழ்வில் மேன்மையடையலாம்…!
நாம் கொண்டுள்ள குறிக்கோளின் மீது உள்ள விருப்பத்துடன், நிதானம், உறுதி என்பவற்றுடன் பொறுமையும் சேர்ந்து இருக்க வேண்டும்…!!
சிக்கல்களற்ற மனிதன் என்று யாருமே இல்லை. அதனால் எனக்கு தான் இவ்வளவு சோதனை என்று நினைத்து நிதானத்தை இழக்காதீர்கள்…!!!
-உடுமலை சு. தண்டபாணி✒️