நான்காவது நக்கீரர் குலாம் காதிர்

Vinkmag ad

Image

குலாம் காதிறு அவர்கள் பாவலர், பத்திரிகையாளர், உரையாசிரியர், நாவலர் என வரலாற்றுத் தடம் பதித்த பல்கலைச் செல்வராவார்.

புலவர் கோட்டை எனப் பெயர் பெற்ற நாகூர் நன்னகரில் கி.பி.1833 ஆம் ஆண்டு குலாம் காதிறு பிறந்தார். இவரது தந்தையார் பெயர் ஆயுர்வேத பாஸ்கர பண்டித வாப்பு ராவுத்தர். இவரது முன்னோர் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து நாகூர் வந்து குடியமர்ந்தனர்.

குலாம் காதிர் ஒன்பது வயதில் இறைவேதம் குர்ஆனையும் அரபுத் தமிழ் இஸ்லாமிய இலக்கிய நூல்களையும் ஓதி முடித்தார். பன்னிரெண்டாவது வயதில் நாகூரில் வாழ்ந்த தமிழ் ஆசிரியர் நாராயண சுவாமியிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். இவரது இருபத்தி எட்டாம் வயதில் தமிழ் ஆசிரியர் இறந்துவிட்டதால், மகா வித்வான் திரு. மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழ்ப் படிப்பைத் தொடர்ந்தார். அதன் பின் தந்தையின் நண்பரும் வழக்கறிஞருமான சரவணப் பெருமாள் ஐயரிடம் ஆங்கில மொழியைக் கற்றார். ஆங்கில நாவலாசிரியர் ஜி.டபிள்யு.எம்.ரெனால்ட்ஸ் எழுதிய உமறு பாட்சா யுத்த சரித்திர நாவலை தமிழில் மொழிபெயர்த்தார்.

முதல் முதலில் தனிக் கவிதைகள் கீர்த்தனைகள் இயற்றினார். பிறகு பினாங்கு சென்று ‘வித்யா விசாரினி’ என்ற பெயரில் தமிழ் வார இதழ் ஒன்றினை 1888இல் நடத்தினார். நன்னூல் விளக்கம் எழுதினார்.

‘பொருத்த விளக்கம்’ நூலிற்கு சுதேசமித்திரன் நாளிதழில் வெளிவந்த மதிப்புரையை ஜமீன்தார் பாண்டித்துரைத் தேவர் பார்த்து பெருமகிழ்வுற்று கி.பி.1901 ஆம் ஆண்டு பாஸ்கர சேதுபதியுடன் நாகூர் சென்று, குலாம் காதிர் நாவலரை சந்தித்து உரையாடினார். அப்பொழுது நாவலர் மதுரையில் தமிழ்ச்சங்கம் ஒன்றினை நிறுவும்படிக் கேட்டுக்கொண்டார். தமிழ்ச்சங்கத்தின் முதற்பெரும் உறுப்பினராக குலாம் காதிறு நாவலரின் பெயரைச் சேர்த்தார்.

அரபு மொழியின் கடுமையான அச்சர வாக்கியங்களுக்கு நேரான தமிழ் மொழியினை அறிந்து அரபுத் தமிழ் அகராதி ஒன்றினை நாவலர் சிறந்த முறையில் வெளியிட்டார்.

கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி தமிழக அரசு குலாம் காதிறு நாவலரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியது.

நன்றி : தி இந்து

 

http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/article5816608.ece

News

Read Previous

பார்வையற்றவர்களுக்கு பார்வை தருவோம்…!

Read Next

இறால் கொழுக்கட்டை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *