சிறந்த தமிழ் நாவல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் சார்பில், வழங்கப்படும் சிறந்த தமிழ் நாவலுக்கான விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
கோவையைச் சேர்ந்த கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் சார்பில் 1983-ஆம் ஆண்டுமுதல் இலக்கிய வளர்ச்சிக்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் வெளியாகும் தலைசிறந்த தமிழ் நாவலுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
2011-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட சிறந்த தமிழ் நாவலின் ஆசிரியருக்கு ரூ.20,000 மற்றும் அந்த நாவலின் பதிப்பகத்தாருக்கு ரூ.5,000-மும் வழங்கப்பட்டது. 2013-க்கான பரிசு “ஆளண்டாப் பட்சி’ என்ற நாவலுக்கு கொடுக்கப்பட்டது. நாவலாசிரியர் பெருமாள் முருகன் மற்றும் நாவலை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்தாரிடமும் இந்த பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது வழங்கப்பட்டு வரும் பரிசுத் தொகை ரூ.37,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.30,000 நாவலாசிரியருக்கும், ரூ.7,500 பதிப்பகத்தாருக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2015-க்கான பரிசுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் ஜனவரி 31-க்குள் 2013, 2014-ஆம் ஆண்டுகளில் வெளியான தமிழ் நாவல்களை போட்டிக்காக, நிர்வாக அறங்காவலர், கஸ்தூரி சீனிவாசன் அறநிலைய கலை மையம், அவிநாசி சாலை, விமான நிலையம் அஞ்சல், கோயமுத்தூர் – 641 014 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
நாவலாசிரியர்கள் மற்றும் பதிப்பகத்தார்கள் தங்களது வெளியீடு ஒவ்வொன்றையும் 4 பிரதிகள் அனுப்பி வைக்க வேண்டும்.