குருவிக் கூடு
குருவிக் கூடு:-
ஒர் அடர்ந்த காடு; அக்காட்டில் ஏராளமான விலங்குகள், பறவைகள், ஒரு மரத்தில் ஒரு சின்னஞ்சிறு குருவி, அழகான கூடு ஒன்றை சொந்தமாகக் கட்டிக்கொண்டு சுதந்திரமாக வாழ்கிறது, எங்கிருந்தோ ஒருவன் வருகிறான். அடுத்து, அவனுக்குச் சொந்தக்காரர்கள் சிலர் வருகிறார்கள், மகிழ்ச்சியக அங்கேயே உணவு சமைத்து சாப்பிட முடிவெடுக்கிறார்கள். ஓடிக்கொண்டிருந்த மானை அடித்துத் தூக்கிக் கொண்டு வருகிறான்.
அதை வேகவைக்க, சுள்ளிகளில் நெருப்புப் பற்ற வைப்பது சிரம்மாக இருக்கிறது, அவன் கண்ணில் குருவிக்கூடு படுகிறது, குருவிக்கூடு மென்மையான நார்களாலானது, அதை எடுத்துத் தீப்பற்ற வைத்ததும் உடனே பற்றிக் கொண்டது. மான் இறைச்சியைக் சுட்டு விருந்தாக்கி வயிறு புடைக்க உண்டார்கள்.
பின்னர், அதே பாதை வழியே தொடர்ந்தார்கள், குருவிக்கு இப்போது கூடு யில்லை, சாம்பலாகிக் கிடக்கும் கூட்டில் இனி வாழ முடியாது, காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது.
அதுபோல்; எங்கிருந்தோ வருகிறார்கள், ‘ இலாப வெறியோடு‘ தமிழகத்தில் தொழிற்சாலைகளை நிறுவுகிறார்கள். அதற்கு எரிபொருள் தேவை, காவிரிப்படுகை, காரைக்குடி, இராமநாதபுரம் பகுதிகளைப் பிளந்து, எண்ணெய்–எரிவாயு– நிலக்கரியை எடுத்து எரியூட்டுகிறார்கள், வேட்டைக்காரன் குருவிக்கூட்டை எடுத்து நெருப்புப் பற்ற வைத்தது போல, காவிரி படுகை நன்றாக பற்றி எரிகிறது. தொழிற்சாலைகள் நடக்கின்றது.
குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் போய்விடுவார்கள், கூடு இழந்த குருவி போல, வாழ்விடம் இழந்த தமிழ் மக்கள்! கூட்டை இழந்த குருவி இன்னொரு கூடு கட்டிக்கொள்ள முடியும். ஆனால் தமிழர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. இழந்தால் இழந்நதுதான்…
– மீத்தேன் அகதிகள்–