காலத்தை வென்ற கண்ணதாசன் பாடல்கள்
காலத்தை வென்ற கண்ணதாசன் பாடல்கள் என்பது பொதுத் .தலைப்பு. – உட் தலைப்பு உங்கள் கையில் … 05.06.2015க்குள் அனுப்புங்களேன்..
காலத்தை வென்ற கண்ணதாசன் பாடல்கள் –
ஜூன் மாதத் தலைப்பு – முன்னோட்டம்..
தேனிறைத்த இன்பங்களைத் தான்சுமந்த சொற்களும்
பூவிதழின் மென்மையாய் புன்னகை காட்டிநிற்க..
பாடல்கள் எனும்பெயரில் பவனிவந்த பேரழகும்
இசையோடு ராஜ்ஜியத்தை கட்டியாண்ட நூறழகும்..
பாட்டினிலே பலபொருள்வைத்து பாங்குடனே சொன்னமகன்
ஏட்டினிலே கண்டவரை ..இன்னும் எவரும் விஞ்சவில்லை!!
சொல்லச் சொல்ல இனிக்குதடா.. கண்ணதாசா.. உன்
பாடல் ஒவ்வொன்றும் சொல்லச் சொல்ல இனிக்குதடா!!
கேட்க கேட்க மயக்குதடா.. கண்ணதாசா.. உன்
பாடல் ஒவ்வொன்றும் கேட்க கேட்க மயக்குதடா!!
நம்பிக்கை பிறக்குதடா.. கண்ணதாசா.. உன்
பாடல் ஒவ்வொன்றும் நம்பிக்கை பிறக்குதடா!!
பாடல்வரிகேட்டு வாழ்க்கைவழி திறக்குதடா..
சோகத்தில் ஆழும்போதும் கண்ணதாசா.. உன்
பாடல் ஆறுதலாய் அங்குவந்து தேற்றுதடா!!
கலைமகளின் கருணையினால் கவிதைமழை நிதம்பொழிய
கண்ணதாசன் பிறந்தாரே! கவியரசாய் திகழ்ந்தாரே!!
சிறுகூடற்பட்டியிலே பிறந்து சிகாகோவிலே மறைந்த
சிங்கார முத்தையா – தந்த கவியத்தனையும் முத்தையா!!
எந்த நிலைக்கும் மனிதனின் எந்த உணர்வுக்கும் கண்ணதாசன் பாடல் கை கொடுக்கிறது! இது எனக்காக எழுதப்பட்ட பாடல் என்று சொந்தம் கொள்ள வைக்கிறது! பெருமைக்குரிய நம் தாய் மொழி தமிழ் கவியரசின் கைவண்ணத்தால் இதயங்களில் எழுதப்பட்டுள்ளது! உயிரோட்டமிக்க.. வார்த்தை நயமிக்க.. நிறைபொருள் –கருப்பொருளாய் அமைந்து எளிமையையும் இனிமையையும் தந்து நம்வாழ்வோடு ஒன்றிக்கலந்திருக்கிறது.
இந்தப் பரிமாணங்களின் கூட்டுத்தொகையைத்தான் கவியரசு கண்ணதாசன்
வாழ்ந்து மறைந்து 34 ஆண்டுகளுக்கு மேலான போதும்.. அவர் மேல் மக்களுக்கு உள்ள பாசம்.. அவர் வரிகளில் கொண்டிருக்கும் ஈர்ப்பு மாறாது ஒருபோதும்! இன்ப துன்பங்களை எல்லாம் எளிய வரிகளிட்டு ஏழை பாமரனும் முணுமுணுக்க வைத்த கவிதைக் கோமகன் கண்ணதாசன்!!
நமது அடுத்த மாதத் தலைப்பு – கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியாக… “காலத்தை வென்ற கண்ணதாசன் பாடல்கள்”
என்னும் தலைப்பில் – படைப்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு மிகவும் பிடித்த கண்ணதாசன் பாடல் ஒன்றின் முதல் வரியை – பல்லவியையே தலைப்பாக்கிக் கவிதை தாருங்கள்.
உங்கள் உள்ளம் சொல்லும் சொற்களை மட்டும் பயன்படுத்துங்கள்..
அமீரகத்தில் கவியரசருக்கு கவிதைத் திருவிழா இதுவாகட்டும்!
தலைப்பு – தற்போது உங்கள் கையில்..
கவிதை வரட்டும் தமிழ்தேர் இதழில்..
—
என்றும் அன்புடன்,
காவிரிமைந்தன்
(மு.இரவிச்சந்திரன்)
நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)
சென்னை 600 075
தற்போது – துபாய் – அமீரகம்
00971 50 2519693
kaviri2015@gmail.com