எம்ஜிஆர்- என் டி ஆர்
எம்ஜிஆர்- என் டி ஆர் இடையிலான நெருக்கம் என்பது குருவுக்கும் சீடனுக்கும் இடையிலான பந்தம் கொண்டதாகும். சினிமா துறையிலும் சரி …அரசியல் தளத்திலும் சரி, எம்ஜிஆர் தான் அவருக்கு பிரண்டு,கைடு,பிலாஸபர் என்ற நிலையில் இருந்தார்.
கட்சியைத் தொடங்கிய போது தெலுங்கு என்ற பெயரோடு கூடிய கட்சிப் பெயரை வைக்குமாறு ஆலோசனை சொன்னவரும் எம்ஜிஆர் தான்.
எம்ஜிஆர் இரட்டை இலை பெற்றார் என்றால் என்டிஆர் இரட்டை சக்கரம் கொண்ட சைக்கிளைச் சின்னமாகப் பெற்றார். தேர்தலின்போது டிஐ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் சைக்கிள்களை ஆயிரக்கணக்கில் கொள்முதல் செய்து தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுப்பி வைத்தவரும் எம்ஜிஆர் தானஎன்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
ஆந்திராவில் முதலமைச்சர் பொறுப்பில் என்டி ராமராவ் இருந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் தமிழக முதலமைச்சராக இருந்தார். அப்போது எம்ஜிஆரின் வேண்டுகோளை ஏற்று தமிழக விழா ஒன்றில் கலந்து கொள்ள என்டிஆர் வந்திருந்தார்.
விழா மேடையில் எம்ஜிஆர் வீற்றிருக்க…
என்டிஆர் பேச்சை தொடங்கியபோது, “கிங் மேக்கர் ஆப் சவுத் இந்தியா” என்று ஆங்கிலத்தில் எம்ஜிஆரைத் குறிப்பிட்டவாறு உரையாற்றினார்.
அவரின் ஆங்கில உரையைத் தமிழாக்கும் பணி அவ்வை நடராசனுக்கு வழங்கப்பட்டு இருந்தது.
அப்போது அவ்வை நடராசன் மொழிபெயர்த்த அந்த வாசகத்தால் எம்ஜிஆரின் முகத்தில் மகிழ்ச்சி மின்னல்கள் பளிச்சென ஒளிர்ந்தன. அந்த ஒரு வாசகமே அவ்வை நடராசனை ஏந்திச் சென்று எம்ஜிஆர் இதயத்தில் அமரவைத்து விட்டது. அது நீண்ட காலம் வரை நீடித்தது.
அந்த மொழிபெயர்ப்பு வாசகம் இதோ…
” தென்னகத்தின் மன்னாதி மன்னனே”
-ஆர்.நூருல்லா-ஊடகன் 20-6-2020.