ஆங்கிலத்தை நேசித்து, தமிழைச் சுவாசிக்க வேண்டும்: நா.ஆ. செங்குட்டுவன்
ஆங்கில மொழியை நேசித்து, தமிழ்மொழியை சுவாசிக்க வேண்டும் என்றார் மலேசிய எழுத்தாளர் நா.ஆ. செங்குட்டுவன்.
புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சி பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் அதன் தலைவர் குரு. தனசேகரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முத்தமிழ் இலக்கிய மன்றத் தொடக்கவிழாவில் அவர் மேலும் பேசியது:
உலகமெங்கும் தமிழ் பரவிக்கிடக்கிறது. இருப்பினும் தமிழ்க் கலாசாரம் தற்போது மறைந்து கொண்டே வருகிறது. பழமையான தமிழ் சொற்கள் மறைந்துவருகின்றன.
தற்போதைய இளம்தலைமுறையினர் ஆங்கிலத்துக்குத்தான் மதிப்பு என நினைக்கின்றனர். அவர்கள் ஆங்கிலத்தை நேசிக்க வேண்டும். தமிழைச் சுவாசிக்க வேண்டும். பெண்களிடத்தில் வாழ்த்தும் குணம் குறைவாக உள்ளது. அனைத்து ஆற்றல்களையும் உள்ளடக்கி, அன்பு, அரவணைப்புள்ள பெண்கள் டிவி தொடர்களில் மூழ்கியுள்ளனர்.
குழந்தைகளுக்கு அறிவு சார்ந்த விஷயங்களை கற்றுக் கொடுக்க அவர்கள் முன்வர வேண்டும். மாணவிகள் அடிப்படைக் கல்வியை கல்லூரியிலும் கற்க வேண்டும்.
பெற்றோர்கள் சொல்வதை மனதிற்குள் பூட்டிவையுங்கள். ஆசிரியர்கள் சொல்வதை மனதில் ஆழப்பதியுங்கள், நண்பர்கள் சொல்வதை காற்றில் பறக்கவிடுங்கள் என்றார் அவர். செயலர் வீ. வைத்தியநாதன், துணை முதல்வர் மா. குமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி தொடக்கவுரையாற்றினார்.
கவிஞர் வீ.கே. கஸ்தூரிநாதன், தமிழ்த்துறைத் தலைவர் ப. பத்மாவதி, பேராசிரியை ஆர். வனிதா ஆகியோர் கலந்து கொண்டனர். கவிஞர் மு. பாலசுப்பிரமணியன் வரவேற்றார். உதவிப் பேராசிரியை ப. லெட்சுமி நன்றி கூறினார்.