முதுவைக் கவிஞர் மறைவுக்கு திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் இரங்கல்
முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் ஜஹ்பர் மறைவுக்கு திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி டி.ஜே.எம். ஸலாஹுத்தீன் ரியாஜி அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு :
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்
குர்ஆனின் குரல் கவிஞர் காவியமாணர்
மெளலவி T.J.M. ஸலாஹுத்தீன் ரியாஜி
முதுவை ஆலிம் கவிஞர் உமர் ஜாஃபர் ஆலிம் மரணித்துவிட்ட துயரமான செய்தி உள்ளத்தை உறைய வைத்துவிட்டது.
பகலுக்கு பின்பு இரவு என்பது போன்று பிறப்பை தொடர்ந்து மரணம் உறுதியானது என்றாலும் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பயன்பட்டு கொண்டிருந்தவர்கள் மரணிக்கும் போது உள்ளமெல்லாம் வேதனையில் வாடுகிறது.
முதுவை கவிஞரும் பஷீர் சேட் ஆலிம் இருவரும் இணைப் பிரியாத நண்பர்களாக இருந்து சமூக சேவையும் சமுதாயப் பணியும் செய்து சமூகத்தில் மிகத் தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்தி நம்மவர்களின் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுக் கொண்டிருந்தார்கள்.
குர்ஆனின் குரல் மாத இதழின் வழியாக சமுதாயத்திற்கு அறிமுகமான உமர் ஜாஃபர் ஆலிம் என்னை சந்திக்கும் போதெல்லாம் குரலின் சேவையைப் பற்றி சிலாகித்து பேசிக் கொண்டிருப்பார்.
லால்பேட்டை அரபிக் கல்லூரியின் 150 வது விழாவை முன்னிட்டு குர்ஆனின் குரல் உழைப்பு மிக மகத்தானதாக இருந்ததால் அதனை மைய்யமாக வைத்து சமூக சேவை தொடர்பாக என்னுடன் அதிகம் தொடர்பு கொண்டிருந்தார்.
முதுவை பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் பஷீர் சேட் ஆலிம் அவர்களும் இதே உணர்வில் இருந்து லால்பேட்டை 150 வது விழாவை கருப்பொருளாக வைத்து குரல் மாத இதழ் நமக்கு மத்தியில் மகத்தான இணைப்பையும், தொடர்பையும் ஏற்படுத்தியது என்று சொல்லிக் கொண்டிருப்பார்.
மிகச்சிறந்த ஆலிமான முதுவை கவிஞரை இழந்து வாடிக் கொண்டிருக்கும் வேதனையாளர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை தந்தருள துஆ, செய்வதுடன் இது மாதிரியான இழப்பை ஈடு செய்து தர வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறோம். அல்லாஹ் கபூல் செய்வானாக !
இப்படிக்கு
ஸலாஹுத்தீன்
94438 43082