நாட்டு நலப்பணித்திட்ட தொடக்க விழா
முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா மற்றும் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வர் எஸ்.சுந்தரவடிவேலு தலைமை வகித்தார். முதுகுளத்தூர் வட்டாட்சியர் எஸ்.ராமமூர்த்தி,காவல்துறை துணை கண்காணிப்பாளர் எம்.நடராஜன்,அரசு மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. ஒருங்கிணைப்பாளர் எஸ்.துரைப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் டி.எஸ்.பி. நடராஜன் பேசுகையில்:முதுகுளத்தூர் பகுதி கல்வியில் மிகவும் பின்தங்கிய பகுதி. எனவே, மாணவர்கள் கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை இருந்தால் போதும் நீங்கள் எதையும் சாதிக்கலாம். இந்த பகுதியில் இருந்து படித்த மாணவர்கள் மிக உயர்ந்த பதவிகளில் இருக்கின்றனர். அவர்களைப் போல நீங்களும் உயர் பதவிகளில் இருக்க வேண்டும் என்றால் மாணவ பருவத்தில் மற்ற தவறான விஷயங்களில் தலையிடாமல் கல்வியில் மட்டும் அக்கறை செலுத்த வேண்டும். நான் உங்கள் முன்பு அதிகாரியாக நிற்பதற்கு என்னுடைய கடுமையான முயற்சி தான் காரணம். நீங்களும் கல்லூரி படிப்பை முடித்து விட்டு உயர் பதவிகளை அடைய வேண்டும் என்றார். விழாவில் பேராசிரியர் உ.சண்முகநாதன் வரவேற்றார். அன்பு தொண்டு நிறுவனர் கோ.உமையலிங்கம், செயலாளர் சதீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி ஆர்.சி.சி. ஒருங்கிணைப்பாளர் ஆ.பாலமுருகன் நன்றி கூறினார்.