ரமளான் உரை – மௌலவி ஏ உமர் ஜஹ்பர் மன்பயீ

Vinkmag ad

ரமளான் உரை

முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் ஜஹ்பர் மன்பயீ

வணங்கிடத் தலையும் – வாழ்த்திட நாவும் தந்தவனே ! இணங்கிட மனமும், வழங்கிடக் கரமும் தந்தவனே ! வல்லவனே … அல்லாஹ் என்னும் தூய இறைவனே ! காலமெல்லாம் உன்னைப் போற்றுகிறேன்! புகழுகிறேன் ! இந்தக் கனிவான ரமளானில் உன் பெயரால் என் கன்னி உரை துவங்குகிறேன் !

அன்பார்ந்த நேயர்களே !

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. புனித ரமளானின் புனிதத்தை உணர்ந்து – அதன் கண்ணியம் காத்து புண்ணியங்கள் சேர்க்கத் துடித்து நிற்கும் அருமைப் பெருமக்களே ! சகோதரர்களே ! சகோதரிகளே ! உங்கள் அனைவருக்கும் என் இதயம் குளிர்ந்த வாழ்த்துக்கள் !

அருமைப் பெருமக்களே ! …

கோடான கோடி ஜீவ இனத்திலே – குறிப்பிட்டுச் சொல்லும் மனிதப் பிறப்பிலே அல்லாஹ் நம்மைப் படைத்திருக்கிறான் ! அல்ஹம்து லில்லாஹ் ! எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே !

இந்த மனித இனம் வறுமையிலும், செழுமையிலும் உழன்று நின்று- சிலர் குளுமையிலும், சிலர் கொடுமையிலும் குடித்தனம் நடத்துவதை அன்றாட மனித வாழ்வில் காணுகிறோம் !

எல்லா மனிதரின் வாழ்வும் ஒன்று போல் அமைந்ததில்லை. செல்வம் படைத்தவர்கள் சந்தோஷத்தில் வாழுகிறார்கள் ! செல்வம் இழந்தவர்கள் சஞ்சலத்தில் வாடுகிறார்கள் ! இரு நிலைப்பட்ட மனித வாழ்வை ஒரு நிலைப்படுத்தி – இருப்பவர்கள் இல்லாதாருக்கு வாரி வழங்கும் இலக்கணத்தை சதக்கா – ஜக்காத் – தர்மம் என்று வகைப்படுத்தி – அழகிய அறவாழ்வை இஸ்லாம் நமக்கு அமைத்துத் தந்திருக்கிறது. அதன் வழிவாழ நமக்கு அன்புக்கட்டளையும் பிறப்பித்திருக்கிறது புனித இஸ்லாம் !

சிக்கனத்தைச் சேமிப்பைப் புகழாத ஏடுயில்லை !

‘சிறு துளியே பெருவெள்ளம்’ என்னுமொரு முதுமொழியில்

தக்கதொரு தருணத்தில் தான்சிறிது சேர்த்து வைத்தால்

தரும்நல்ல பலனையது; பயனடைந்தோர் சொன்னதிது !

இக்கருத்தை ஏற்காத ஏடுமில்லை நாடுமில்லை !

இஸ்லாமும் சிக்கனத்தைச் சொல்லாத நாளுமில்லை !

பக்திக்குள் ஓர்முடிச்சும் பொருளியலில் ஓர்முடிச்சும்

பக்குவமாய் போட்டுவைத்த தத்துவமே நோன்புதானே ?

பேராசை தடுப்பதற்கு நோன்புவொரு கேடயமே !

பெருமாசை கொண்டலைந்தோர் பின்னடைந்தார் ! சரித்திரமே !

பாராண்ட மன்னவரும் பேராசை கொண்டதனால்

பிறந்தமண் பறிகொடுத்து புகுந்திட்டார் வேறிடமே !

சீரான வாழ்வமைத்துச் சிறப்பாகப் பேரெடுத்துச்

சரித்திரத்தில் புகழடைய மனக்கட்டு அவசியமே !

யாராரோ சொல்வதற்கும் கேட்பதற்கும் இனித்திடுமே !

எளிதாகப் பயிற்சிபெற நோன்புவொரு தத்துவமே !

உண்பதிலோர் கட்டுப்பாடு ! பருவதில் கட்டுப்பாடு !

உணர்ச்சிதனைக் கட்டிப்போட்டு வாழ்வதிலோர் கட்டுப்பாடு !

எண்ணியெண்ணிப் பார்க்கையிலே இத்தகைய கட்டுப்பாடு –

ஏற்றமிகு வாழ்வுதரும் ; என்றுமில்லை தட்டுப்பாடு !

மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை கொள்வதெல்லாம்

மனக்கட்டுப் பாடின்றி மனம்போன போக்கிலன்றோ?

கண்ணியமும் கட்டுப்பாடும் எங்கிருந்து பிறக்கிறது?

காட்டுமெழில் இஸ்லாத்தின் கடமைகளில் தெரிகிறது !

முப்பத்து நாள் தொடர்ந்து முழுதாக நோன்பிருந்து

முறையான பயிற்சியினால் முப்பசியைத் தானறிந்து

அப்பழுக்கு இல்லாத மனிதரிலும் புனிதரென

ஆகிவிட்ட முஃமின்களே ! முஸ்லிம்களே ! உங்களுக்கு

இப்பொழுது இன்பத்தின் எல்லையெனப் பிறந்திருக்கும்

ஈத் பெருநாள் மலர்ந்திருக்கும் ! சொர்க்கவாசல் திறந்திருக்கும் !

செப்பியதோர் ரஹ்மத்தும் மஃபிரத்தும் சேர்ந்திருக்கும் !

சங்கைமிகு ஸலாமத்தும் பரக்கத்தும் குவிந்திருக்கும் !

‘ரய்யானின்’ சொர்க்கபதி அலங்கரித்துக் காத்திருக்கும் !

‘ராஹத்தாய்’ கஸ்தூரி வாசமங்கு கமழ்ந்திருக்கும் !

மெய்யான ‘ஹூருல்ஈன்’ சுவனமங்கை சிரித்து நிற்கும் !

மேலான இறையோனின் ‘ரிலா’- பொருத்தம் சிறந்திருக்கும் !

துய்ய மலக்(கு) ‘ரில்வானும்’ விழிகுளிர்ந்து வரவேற்கும் !

தூதர் நபி ‘ஷபாஅத்தும்’ தடையின்றித் தொடர்ந்திருக்கும் !

தெய்வீக மார்க்கத்தின் திருக்கடமை நிறைவேற்றி

திகழ்கின்ற ‘முத்தக்கீன்’ தீனவரே ! வாழ்த்துகிறேன் !

பகலெல்லாம் பசித்திருந்த உத்தமரே வாழ்த்துகிறேன் !

பண்பாடி தராவீஹைத் தொழுதவரே வாழ்த்துகிறேன் !

முகமலர தர்மங்கள் ஈந்தவரே வாழ்த்துகிறேன் !

முழுதாக குர்ஆனை முடித்தவரே வாழ்த்துகிறேன் !

இகபரமும் இறையருளைப் பெற்றிடவே வாழ்த்துகிறேன் !

இருகரமும் ஏந்திநின்று துஆச் செய்து வாழ்த்துகிறேன் !

அகங்குளிரக் கவியரங்கம் அரங்கேற்றும் வானொலியாம்

ஆறு – பல ஆற்றல்பெற அனுதினமும் வாழ்த்துகிறேன் !

News

Read Previous

நோன்பு குறித்த வானொலி உரை – பகுதி 2

Read Next

கணினிக் கல்வி இதழ் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published.