பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே

Vinkmag ad
முனைவர். துளசி.இராமசாமி அவர்களின் “பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே”
என்ற நூலின் அறிமுகம்தான் இக்கட்டுரை.
கார்த்திகேசு.சிவதம்பிக்கு இந்நூலை படையலாகக் கொடுப்பதிலிருந்து இந்நூல் தொடங்குகிறது.
இந்நூல் சுமார் 885 பக்கங்களைக் கொண்ட பெருநூல். தற்போது நாம் சங்க இலக்கியம் என்று
நினைத்திருக்கும் பாடல்கள் பழந்தமிழகத்தில் வாய்ப்பாடல்களாக பாடப்பட்டு வந்ததுதான் என்று
அறுதியிட்டுக் கூறியிருக்கிறார். தமிழுக்கென்று வரிவடிவம் கண்டுப்பிடித்த பிறகு, இவ்வாய்
மொழிப்பாடல்கள் இலக்கியங்களாகத் தொகுக்கப்பட்டன வென்றும், அவைகள் வரியின்
அடிப்படையில் நான்குத் தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டன என்று பல்சான்றுகள் மூலம் தன்
நடையில் விவரித்துச் செல்கிறார்.

வெறும் வாய்மொழியாகப் பாடப்பட்டு வந்த பாடலகளை, தமிழுக்கு வரிவடிவம் கண்டுப்பிடித்தக்
காலத்தில், அஃதாவது, எழுத்துத் தொடங்கியக் காலத்தில் பழந்தமிழர்களால் பாடப்பட்ட பாடல்களை
தொகுக்கும்போது, பொருளின் அடிப்படையில் அல்லாது வரிகளைக் கொண்டுத் தொகுக்கப்பட்டிருந்தது.

பழந்தமிழ்ப் பாடல்கள் வரிகளின் எண்ணிக்கைகளைக் கொண்டு கீழ்வருமாறுத் தொகுக்கப்பட்டது.

குறுந்தொகை – 4-8 வரிகளைக் கொண்டது
நடுத்தொகை – 9-12 வரிகளைக் கொண்டது
நெடுந்தொகை – 13-31 வரிகளைக் கொண்டது
புறத்தொகை – 31 வரிகளுக்கு மேல் உள்ளவைகள்

அவ்வாறுத் தொகுத்தப் பாடல்களில் கடவுள் வாழ்த்துப் பாடல்களோ, அக, புற குறிப்புகளோ,
பாடியோர்-பாடப்பட்டவர் பெயர்களோ, திணை – துறைக் குறிப்புகளோ, கொளுவென்னும் அடிக்குறிப்புகளோ
காணப்படவில்லை என்று பல அறிஞர்களின் எழுத்துக்களைச் சான்றுக் காட்டி எழுதுகிறார். பழைய ஏட்டுச்
சுவடிகளில் இவ்வகையானப் பாகுபாடுகள் இல்லை என்பதையும் நாம் நோக்க, ஆசிரியர்க் கூற்றின் உண்மையை
எளிதில் உள்ளலாம்.

இவ்வாறுத் தொகுத்தக் காலம் சற்றொப்ப, கி.மு.3ஆம் நூற்றாண்டின் தொடக்கம் எனகிறார். இதற்கு
தமிழ்நாட்டில், தற்போது கிடைக்கும் பழைமையானக் கல்வெட்டுச் சான்றுகள் தம் கருத்துக்கு துணையழைக்கிறார்.

இறையனார் அகப்பொருள்ப் பற்றி தனியாக ஒரு பகுதியை ஒதுக்கி, அகப்பொருள் உரையை ஆராய்கிறார்.
இறையனார் அகப்பொருள் உரையெழுந்தக் (சுமார் 8 – 10 நூற்றாண்டுகள்) காலத்தில்தான், கடவுள்
வாழ்த்து, அகப்புறத் திணைப் பாகுபாடுகள் தொகை நூற்களில் இடைச்செருகலாகத் மறுத்தொகுப்பு
செய்யப்படுகிறது. அப்படி, மறுத்தொகுப்புக் காணும்போது ஒவ்வொருத் தொகுப்பிலும் நானூறுப் பாடல்களாக
வரும்படி ஒரு ஒழுங்குமுறையில் தொகுக்கப்படுகிறது. இத்தொகுப்பின்போது, சில தொகைநூற்களின்
பெயர்களும் மாற்றப்படுகிறது. எங்ஙனமெனின்,

குறுந்தொகை – குறுந்தொகையாகவும்,
நடுந்தொகை – நற்றினையாகவும்,
நெடுந்தொகை – அகநானூறாகவும்,
புறத்தொகை – புறநானூறாகவும்

மாற்றமடைக்கின்றன என்று தன் கருத்தை தெளிவாக எடுத்துக் கூறுகிறார். இரா.இராகவையங்கார் 1918இல்
வே.இராஜகோபாலையங்காருடைய அகநானூறு நூலின் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்.

”உருத்திர சன்மன் தான் நெடுந்தொகையை அகநூனூறாக்கி, களிற்றியானைநிரை, மணிமிடைப் பவளம்,
நித்திலைக் கோவை என்ற பிரிவுகளில் பகுத்தார். திணை, துறையும் பகுத்தார்”.

குறுந்தொகைக்கு சவரிப்பெருமாள் அரங்கனும், நடுத்தொகைக்கு பின்னத்தூர் நாராயணசாமி ஐயரும்
திணை, துறை பகுத்திருக்கிறார்கள். பாடப்பட்டோரும், பாடியோரும், பிற்காலத்துச் சேர்மானங்கள் என்று
நம் கவனத்துக்கு கொண்டு வருகிறார்.

தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் பின்னாளைய இணைப்பு என்கிறார். அவ்வாறு இணைத்தப் பின்னையும்,
பல பாடல்கள் இடைச்செருகலாக வலிந்து நுழைக்கப்பட்டிருக்கிறது என்று தக்க ஆதாரத்துடன் நிறுவிச்
செல்கிறார்.

இப்படி நிறைய கருத்துக்களை கொண்டிலங்கும் இந்நூல் தமிழ்க் கூறும் நல்லுலகத்திற்கு ஒரு நல்வரவு
என்பதில் ஐயமில்லை.

நூலின் பெயர்: பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே
நூலின் ஆசிரியர்: முனைவர்.துளசி.இராமசாமி (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
நூலின் விலை: ரூ.700/-
பதிப்பகம்: விழிகள், கதவு எண்.1, பிளாட்.எண்.66, 3ஆவது தெரு, வீனஸ் காலனி விரிவு, வேளச்சேரி, சென்னை-42,
அலைபேசி.எண்: 9790914533
இமெயில்: tulasi.ramasamy@gmail.com

News

Read Previous

மை

Read Next

தாலாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *