பரங்கிப்பேட்டையில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு!
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் இதுவரை பதினைந்து மாநாடுகளை நாகூர், நீடூர், காரைக்கால், சென்னை, திருச்சி, கோட்டக்குப்பம், முத்துப்பேட்டை, இராஜகிரி, புதுச்சேரி, மயிலாடுதுறை, பள்ளப்பட்டி, பரமக்குடி, தஞ்சாவூர், அதிராம்பட்டினம் மற்றும் காயல்பட்டினம் ஆகிய நகரங்களில் சிறப்போடு நடத்தி இருக்கிறது. நூற்று என்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் பல்வேறு துறைகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. சாதனை படைத்த சான்றோர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், சமுதாய புரவலர்களுக்கு இம் மாநாடுகளில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளனர். இம் மாநாடுகளில் அனைத்து சமுதாய கல்லூரி மாணவ – மாணவிகளும் பங்கேற்ற கட்டுரைப் போட்டிகள் இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கின்றது.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பாக வெளியிட்டுள்ள ‘இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வுக் கோவை’, ‘மானுடம் போற்றுவோம்’, ‘இஸ்லாமியத் தமிழ் எழுத்தாளர்கள்’, ‘இலக்கிய உலகம்’, ‘இஸ்லாம் வளர்த்த தமிழ்’, ‘தற்கால இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’, ‘இலக்கியச் செல்வர்கள்’, ‘ஆய்வுச் சோலை’, ‘ஆய்வுப் பேழை’ ஆகிய ஒன்பது நூல்கள் தமிழ் உலகில் நன்மதிப்பை பெற்றிருக்கின்றது.
அந்த வகையில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய கழகத்தின் பதினாறாம் மாநாடு எதிர்வரும் 2014 மே மாதம் இறுதி வாரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க பரங்கிப்பேட்டையில் நடைபெற இருக்கின்றது. இம் மாநாட்டில் உலகெங்கிலும் இருந்து இலக்கிய ஆர்வலர்கள், மார்க்க அறிஞர்கள், சமுதாய புரவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தனிச் சிறப்பை விலக்கிட சான்றோர்கள் பங்கேற்கின்றனர்.
இம் மாநாடு சம்பந்தமான முதல் ஆலோசனை கூட்டம் கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவரும், பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவருமான முனைவர் எம்.எஸ் முஹம்மது யூனுஸ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் நிர்வாகிகளும், பரங்கிப்பேட்டையின் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்று மாநாடு வெற்றிக்கான ஆலோசனைகளை வழங்கினர்.
—————-
என்றும் மாறா அன்புடன்…
குவைத்திலிருந்து…
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
குவைத்திலிருந்து…
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ