ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்!
ஏ.ஆா்.தாஹாவின்
சிந்தனை அரும்புகள்!
———————————————–
கிடைத்து விட்டுத்தான் போகட்டுமே…
——————————————————
உலகெங்கும் வாழக் கூடிய காயலர்
கள், காயல் நல மன்றங்களின் சார்பாக
வும், வசதி படைத்தவர்கள் தனியாகவும்,
வருடா வருடம் ஏழை எளிய மக்களுக்கு
புனித ரமளானில் சமையல் பொருட்கள்
வழங்கி வருவது நாமறிந்ததே.
ஊரில் சில தினங்களாக பல்வேறு அமைப்புகள், அரிசி உள்ளிட்ட சமையல் பொருட்களை அந்தந்த அமைப்புகளின் தகுதிக்கேற்ப,தாங்கள் கண்டறியும் ஏழை எளிய மக்களின் வீடுகளுக்கு, (அந்தந்த அமைப்புகளின் ஊர் பிரதிநிதிகளால்)
நேரில் சென்று வழங்கி வருகிறார்கள்.
சில அமைப்புகள் பெருநாளைக்கு அந்த எளியவர்களுக்கு இறைச்சியும் கொடுத்து வருகிறார்கள். இது பல்லாண்டுகளாக அழகிய முறையில் நடந்து வருகிறது அல்ஹம்து லில்லாஹ்.
அதுபோன்றே தனி நபர்களும்
மறை முகமாக அமைதியான முறையில், யாருக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது
என்பதை வெளிப்படுத்தாமல், உதவி
வழங்கும் தனது பெயரும் வெளி வராமல் பன்னூறு பொட்டலங்களை பல காலமாக வழங்கி வருவதும் நடைபெற்று வருகிறது.
இந்த வருடம் ஐக்கியப் பேரவையும்
உலகளாவிய காயல் நல மன்றங்களின்
உதவியோடும்,உள்ளூர் தனவந்தர்களின் அனுசரனையோடும், பேரவையின் உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பையும் வழங்கி,மிகச் சிறப்பாக நமதூரின் ஏழை எளிய மக்களுக்கு சமையல் பொருட்களை ஊர் முழுவதும் பரவலாக வழங்கி
வருகிறார்கள். அல்ஹம்து லில்லாஹ்.
அழகிய முயற்சி, அல்லாஹ் வெற்றி
யாக்கித் தருவான்.அள்ளித் தருகின்ற அனைத்து மக்களுக்கும், அதற்காக உழைப்பவர்களுக்கும் வல்ல ரஹ்மான்
புனித மிக்க ரமளானின் பொருட்டால்
கிருபை செய்வானாக! மென்மேலும் பறக்கத்தைத் தருவானாக ஆமீன்.!
எனதன்பிற்கினியவர்களே….!
உதவிகள் பரவலாக எல்லோருக்கும்
போய் சேரனுமே என்ற எண்ணத்தில்,
ஒரு வீட்டிற்கு ஒரு பொட்டலம் மட்டுமே
என்ற அடிப்படையில் செயல்பட்டாலும்,
அந்த ஏழைகள் வேறு எந்த அமைப்பின்
வாயிலாகவோ, அல்லது யாரிடமோ உதவி
பெற்று விட்டார்கள் என்பதற்காக நாம்
நமது அமைப்பின் சார்பாக தனியே கொடுப்பதை நிறுத்த தேவையில்லை.
மேலும் ஒரு பொட்டலம் சாமான் நாம்
அவர்களுக்கு வழங்குவதற்காக, அந்த ஏழைகளின் பூர்வீகத்தையே தேட முயல்
வதும் கண்ணியமாகாது.
ஒரு வீட்டிற்குக்கு ஒன்றுக்கு இரண்டு
பொட்டலம் கிடைப்பதை தவிர்ப்பதற்காக,
அவர்கள் யாரிடாமாவது உதவி பெற்று இருக்கிறார்களா என்று அலசி ஆராய்ந்து
பார்ப்பது அவர்களின் தன் மானத்திற்கு இடையூறாக ஆகி விடக் கூடாது, மனக் கஷ்டத்தை உண்டாக்கி விடக் கூடாது என்பதையும் நினைவில் கொள்ளனும்.
ஒரு சிலருக்கு வேண்டுமானால் இரு பொட்டலங்கள் கிடைத்திருக்கலாம்.
ஒன்றை நாம் புரிந்து கொள்ளனும்!.
கண்ணிய மிக்க இந்த ரமளான்
காலங்களில்தான், அந்த ஏழை எளிய
மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை
சாமான்களும், இறைச்சியும் அக்கம்
பக்கத்து வீடுகளில் இருந்து பித்ரா
அரிசி பாக்கெட்களும் கிடைப்பதைக் காண்கிறோம்.புனித ரமளானைத் தவிர
மற்ற காலங்களில் அவர்களைப் பற்றி
நாம் கொஞ்சமும் சிந்திப்பதுமில்லை,
கண்டு கொள்வதும் இல்லை. இதுதான் எதார்த்தம்.
ஆக எத்தனை அமைப்பிலிருந்து
அவர்களுக்கு பொருள் கிடைத்தாலும்
அதை வாங்க அவர்கள் தகுதி படைத்த
வர்கள்தான். காரணம் அந்த அளவுக்கு கஷ்டம். சிலர் வாய் விட்டு கேட்க முடியா
மல் தவிக்கிறர்கள். பலர் கேட்க வெட்கப்
பட்டு வாடுகிறார்கள். அவர்களை தேடிச் சென்று உதவுவதும் சிறப்பு.
இந்த புனித ரமளான் மாதத்தில்
கிடைப்பதை கொண்டுதான் அந்த
ஏழை எளிய மக்கள், இரண்டு மூன்று மாதங்களை அவர்கள் சற்று சிரமமின்றி வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டுவார்கள். ஆகையால் அவர்களுக்கு அல்லாஹ்வின் நாட்டப்படி தானாக வந்து கிடைப்பதை,
பிறர் கொடுப்பதை நாம் எந்த வகையிலும் தடுத்திடல் ஆகாது.
*ஏழை எளியவர்கள்தானே
*கிடைத்து விட்டுப் போகட்டுமே.
*யாருக்கு உதவி கிடைக்கவில்லையோ
*அவர்களை நாம் இனங்கண்டு
*உதவிகளை அள்ளி வழங்குவோமே
*இன்ஷா அல்லாஹ்.
ஏ.ஆா்.தாஹா(ART)03-04-2020