“இ’-புத்தகங்களை விரும்புவோர் அதிகரிப்பு!
இ-புத்தகங்கள் குறித்து தெரிந்து கொள்வதில் வாசகர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருவது தில்லி சர்வதேச புத்தகக் கண்காட்சியில் தெரிய வந்தது.
தொழில்நுட்ப மாற்றத்துக்கு ஏற்ப புத்தகங்களின் வடிவங்கள் மாறியது போல, தற்போது அதிகரித்துள்ள ஸ்மார்ட் போன்கள், டேப்கள் ஆகியவற்றால் புத்தகங்களை இ-புத்தக வடிவில் மொபைல் போன்களிலும், டேப்களிலும் படிப்பது சாத்தியமாகியுள்ளது.
இப் புத்தகக் கண்காட்சியில் இ-புத்தகம் குறித்து அரங்கு அமைத்துள்ள பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்யூட்டர் கிராப்பிக்ஸ் பதிப்பகத்தைச் சேர்ந்த ஜெ. வீரநாதன் கூறியது:
தில்லி சர்வதேச புத்தகக் கண்காட்சியில் அண்மையில் இ-புத்தகம் பதிப்பது தொடர்பான கருத்தரங்கு பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற்றது. அதில் இ-புத்தக வாசிப்பு குறித்து பலர் பேசினர். “டேப், ஸ்மார்ட் போன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் உள்ள 30 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் இ-புத்தகங்களை வாசிக்கத் தொடங்கியுள்ளனர். இணையதள வசதி கொண்ட ஸ்மார்ட் போன்கள் மூலம் 20 சதம்வீதம் பேர் இ-புத்தகங்களை வாசித்து வருகின்றனர்.
இ-புத்தகங்கள் சாதாரண புத்தகங்களைக் காட்டிலும் 20 சதவீதம் விலை குறைவாக இருக்க வேண்டும் என வெளிநாடுகளில் விதி உள்ளது. இ-புத்தகங்களை வெளியிட பல்வேறு தொழில்நுட்பம் உள்ளதால் அவற்றைப் பயன்படுத்தி பதிப்பாளர்கள் இ-புத்தகங்களை வெளியிட முன்வர வேண்டும் என்றார் ஜெ. வீரநாதன்.
அமேஸான் நிறுவனத்தின் இந்தியத் துணைத் தலைவர் அமித் அகர்வால் கூறுகையில், “இலக்கியம், புனைவு, கல்வி, போட்டித் தேர்வுக்குத் தயாராதல், வணிகம், பொருளாதாரம், குழந்தைகள் புத்தகம், சுய சரிதை உள்ளிட்ட தலைப்புகளில் எங்கள் இணையதளத்தில் 80 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களும், 20 லட்சத்துக்கும் அதிகமான இ-புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இ-புத்தகங்களை வாசித்து மகிழ “கிண்ட்ல் பேப்பர்வைட்’ ரூ.10 ஆயிரம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் 20 லட்சம் புத்தகங்களை வாசிக்க முடியும் என்றார்.
ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனை விற்பனை செய்து வரும் மதுரையைச் சேர்ந்த டுடோரிஷ் நிறுவனத்தின் வினோத் கூறுகையில், “டிஎன்பிஎஸ்சி, ஐஏஎஸ், எஸ்எஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான வினா-விடை தொடர்பான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்களை விற்பனை செய்து வருகிறோம். போட்டித் தேர்வுக்குத் தயாராகும் ஆர்வலர்கள் பயணத்தின் போதும், அலுவலகத்திலும் வினா-விடைகளை படித்துத் தெரிந்து கொள்ளும் வகையில் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தில்லியில் உள்ளவர்களும் வாங்கிச் சென்றுள்ளனர்’ என்றார்..