அல்லாஹ்வின் திருப்பெயரால் …
-கம்பம் ஹாரூன் ரஷீத்
அளவற்ற அருளாளனின்
அளப்பரிய அருட்பொலிவாய்
நிகரற்ற அன்புடையோனின்
நிரந்தர அரவணைப்பாய்
எல்லாம் வல்ல அல்லாஹ்வின்
எல்லையற்ற பேரன்பாய்
நாவின் ருசித்தல்களுக்கு
நல்விருந்தாய்த் துவங்குகின்ற
அத்தனை துவக்கங்களையும்
ஆட்கொள்ளும் அருமருந்து !
சுற்றிச் சூழ்ந்திருக்கும்
சுற்றுபுறத் தீமைகளின்
தீங்குகள் தீண்டிடாத
தீன் நெறியின் கவசமாக,
விண்ணுக்கும் மண்ணுக்கும்
பின்னலிட்ட மின்னலாக
மீட்டுகின்ற ஒளிவிருந்து !
ஆரம்பமே உன் அழைப்பிதழ்
அல்லாஹ்வின் திருப்பெயரால்…
செயல்களுக்குக் கிரீடமிட்டு,
செயற்கரிய வெற்றியினைச்
செய்விக்கும் முயல்வுகளாய்,
இதயத்துள் ரிதமித்தால்
இனியெதற்குப் பெரும்பேறு !
ஆத்மத்தின் சுவாசத்தோடு
ஆட்கொண்ட துவக்கமாக,
சுவனத்தின் வாசத்தோடு
சுகந்தத்தின் நேசமாக,
சாமானிய உள்ளங்களில்
சக்தியின் சால்புகளாக
சாந்தியோடு தழுவுகின்ற
சத்தியத்தின் வேர்ப்பிடிப்பு !
உச்சரிக்கும் நேரமெல்லாம்
உள்ளொளி விழுதுகளாய்
ஊடுருவி ஊனமகற்றி,
உணர்வுகளில் தெளிவூட்டி
உளமார்ந்த நிறைவுகளாய்
நலமளிக்கும் நல்லமுது !
அடிநெஞ்சில் அரும்பலிட்டு
ஆழ்நினைவில் குடிபுகுந்து
வாய்திறந்து ஒலிக்கும்போது
வாய்த்திட்ட வாழ்த்துகளாய்
நோய்நொடி வருத்தங்களை
நீக்குகின்ற மந்திரமாய்
நீக்கமறக் கலந்தபோது
விரட்டப்பட்ட ஷைத்தானின்
மிரட்டலுக்குப் பயமின்றி
ஒப்புமைகளே இல்லாத
ஒப்பற்ற உயிர்த்துடிப்பாய்
எப்பக்க எதிர்ப்பினையும்
எதிர்கொள்ளும் பாதுகாப்பு !
நன்றி : இனிய திசைகள் , பிப்ரவரி 2014